மழைக்கு முன் சீரமைப்பு, மழைக்குப் பின் புதிய சாலைகள்: சென்னை மாநகராட்சியின் அதிரடி திட்டம்..!
மழைக்காலத்தில் பொதுமக்களுக்கும் வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடிய மரக்கிளைகளையும் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
வடகிழக்குப் பருவமழை நெருங்கி வரும் நிலையில், சென்னையில் சாலைகள் மற்றும் தெருக்களைச் சீரமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. மழைக்காலத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்கும் வகையில், சேதமடைந்த பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து மாநகராட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நகரின் 900 தெருக்களைச் சீரமைக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், மிகவும் மோசமான நிலையில் இருந்த 900 தெருக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றைச் சீரமைக்க சுமார் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மழை தொடங்குவதற்கு முன்பாக இந்தப் பணிகளை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.


