'சட்டமன்ற நேரலையில் நடக்கும் மெகா மோசடி?;எதிர்க்கட்சிகளை முடக்கத் தவெக அரசு போடும் வியூகம்- விவரிக்கும் வழக்கறிஞர் துரை அருண்
சட்டமன்றம் என்பது மக்களாட்சியின் மிக முக்கியமான அங்கமாகும். அவைக்குள் நடக்கும் விவாதங்கள் அனைத்தும் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆனால், தற்போதைய தவெக ஆட்சியில் சட்டமன்ற நேரடி ஒளிபரப்பில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகச் செய்யப்படுவதாகக் கூறப்படும் இருட்டடிப்பு மற்றும் அவைக்குள் திட்டமிட்டு உருவாக்கப்படும் அரசியல் பிம்பங்கள் என சட்டப் பார்வையை முன்வைக்கிறார் வழக்கறிஞர் துரை அருண்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் துரை அருண் நக்கீரன் டிவிக்கு கொடுத்த பிரத்யேக நேர்காணலில் இதுகுறித்து கூறுகையில், ''தற்போதைய சட்டமன்ற விவாதங்களின் நேரடி ஒளிபரப்பில் மிகப்பெரிய மோசடியும் இருட்டடிப்பும் அரங்கேறி வருகிறது. எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்களோ அல்லது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினோ எழுந்து நின்று பேசும்போது, ஆளும் தவெக கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் உறுப்பினர்களும் அவைக்குள் எழுந்து நின்று கத்துகிறார்கள், கூச்சல் போடுகிறார்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்குப் புறம்பான தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், நேரடி ஒளிபரப்பில் ஆளுங்கட்சியினரின் இந்த ஒழுங்கீனமான நடவடிக்கைகளைக் காட்டுவதே இல்லை.
மாறாக, சபாநாயகரின் முகத்தை மட்டுமே காட்டி 'உட்காருங்கள்' என்று அவர் பேசுவதை ஒளிபரப்புகிறார்கள்.அதே நேரத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சாதாரணமாக எழுந்து நின்றால் கூட அதை உடனே கேமராவில் பெரிதாகக் காட்டுகிறார்கள் . இதனால், பொதுமக்கள் மத்தியில் எதிர்க்கட்சியினர்தான் அவையின் நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்கிறார்கள் என்ற தவறான கற்பிதம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது . மேலும், அவைக்குள் 'உதயநிதி வெர்சஸ் விஜய்' என்றொரு அரசியல் பிம்பத்தைக் கட்டமைக்க ஆளுங்கட்சி தீவிரமாக முயல்கிறது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
