“என் பொண்ணுக்கு ஹெச்.ஐ.வி எப்படி வந்தது?” - தத்தளிக்கும் தந்தை... மறுக்கும் மருத்துவமனை!
ஒரு பாட்டில் ரத்தம்... ஒரு குடும்பத்தின் 8 ஆண்டு கண்ணீர்!
“கோயமுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில ரத்தம் ஏத்துனதாலதான் ரெண்டு வயசா இருந்த என் பொண்ணுக்கு ஹெச்.ஐ.வி வந்துச்சு. ஆனா, ‘பழனியில மொட்டைபோட்டாலும் இந்த நோய் வரும்’னு பழனிக்கே போகாத எங்களைப் பார்த்து சொல்றாங்க. என் பொண்ணு படுற கஷ்டத்தையும், எங்க குடும்பத்தையே ஒதுக்குறதையும் பார்க்குறப்ப நெஞ்சே கனக்குது சார்...” என்று கண்ணீர் வடிக்கிறார் விஸ்வநாதன்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள இனாம்புதூரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். 2018-ல் உடல்நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்த தன் மகளுக்கு ரத்தம் ஏற்றிய பிறகு, அவருக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியவந்ததாகக் கூறுகிறார். மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தத்தால்தான் தொற்று ஏற்பட்டதாகக் குற்றம்சாட்டி, தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை கோரி கடந்த எட்டு ஆண்டுகளாகப் போராடிவருகிறார்.



