மாவட்டத்தில் 10 ஆண்டு இல்லாத அளவு வறட்சி அபாயம் : பொய்த்தது தென்மேற்குப் பருவ மழை
திருப்பூர்:கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, திருப்பூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்துள்ளது. பருவம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மீதமுள்ள நாட்களிலாவது வருண பகவான் கருணை காட்டுவாரா என, விவசாயிகள் வானத்தை நோக்கி ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழைப்பொழிவு, 669.64 மி.மீ., என கணிக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில், 23.30 மி.மீ., கோடையில், 146.62 மி.மீ., தென்மேற்கு பருவத்தில், 180.59 மி.மீ., வடகிழக்கு பருவத்தில், 327 மி.மீ., மழை பெய்ய வேண்டும் என்பது இயல்பான அளவு.
தென்மேற்கு பருவமழை, மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பதற்கும், வறட்சியை தள்ளிப்போடுவதற்கும் முக்கியமானது. அடுத்ததாக வரும் வடகிழக்கு பருவமழையை நம்பி, மானாவாரி பயிர் சாகுபடியும் மேற்கொள்ளப்படுகிறது. கால்நடைகளுக்கான தீவனமும், மேய்ச்சலும் மழையை நம்பியே உள்ளது.


