சத்துணவு சாம்பாரில் சாணி பவுடர்... 51 மாணவர்கள் உயிர் தப்பியது எப்படி?
கொலை செய்யும் நோக்கத்துடன் உணவில் விஷம் கலக்கச் செய்ததாக ஆறுமுகத்தின் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு சமைக்கும் பணியிலிருந்து மனைவியை நீக்கியதால் ஆத்திரமடைந்த கணவர், 8-ம் வகுப்பு மாணவியைப் பயன்படுத்தி சாம்பாரில் சாணி பவுடரைக் கலக்கச் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்துக்கு அருகே ராமபைலூரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. 51 மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளியில் காலைச் சிற்றுண்டி, மதிய சத்துணவு வழங்கப்படுகிறது. உணவின் தரத்தை அறிய ஆசிரியர்கள் சுவைத்துப் பார்ப்பது வழக்கம். ஆகஸ்ட் 31-ம் தேதி சாம்பாரைச் சுவைத்துப் பார்த்த ஆசிரியை ரேவதியின் கையில் மஞ்சள் கறை ஏற்பட்டதுடன், வயிற்று உபாதையும் ஏற்பட்டிருக்கிறது. சாம்பாரில் பயன்படுத்தப்பட்ட மஞ்சள்தூள்தான் காரணமாக இருக்குமோ என்று சந்தேகித்த ஆசிரியர்கள், அதைச் சோதித்திருக்கிறார்கள். ஆனால், மஞ்சள் தூளில் எந்தப் பிரச்னையும் இல்லை.

