ஆணவக் குற்றங்களுக்கு எதிரான சட்டம் எப்போது வரும்?
`பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற உயரிய வாழ்க்கை நெறியைக் கொண்டவர்கள் தமிழர்கள். ‘சாதி இரண்டொழிய வேறில்லை' என்று அந்தக் காலத்திலேயே நம் ஔவை பாட்டி ‘நல்வழி' காட்டியிருக்கிறார். சாதிய வன்கொடுமைகளுக்கும், பெண்ணடிமைத்தனத்துக்கும் எதிராகப் போராடிய பல நூற்றாண்டு வரலாறு உண்டு நமக்கு. ஆனாலும் இன்றுவரை ஆணவக் குற்றங்களுக்கு நம்மால் முடிவுகட்ட முடியவில்லை என்பது மிகப்பெரும் அவமானம்.
சமீபத்தில், தென்காசியில் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்து மணம் முடித்த தம்பதியை பெண்ணின் தந்தையே வெட்டிய சம்பவம் நெஞ்சதிர வைக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு சென்னை, கேளம்பாக்கத்தில் தன் மகளைக் காதலித்த இளைஞரை, தந்தையும் உறவினர்களும் வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.
`இது போன்ற கொடுமைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க, தனிச்சட்டம் தேவை’ என்ற கோரிக்கை நெடுங்காலமாக எழுப்பப்படுகிறது. முன்பிருந்த எந்த அரசும் அந்தக் குரலுக்குச் செவிமடுக்கவில்லை. 2025, அக்டோபரில் கடந்த தி.மு.க அரசு ஆணவக் குற்றங்களுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றுவது பற்றி ஆய்வுசெய்ய அமைத்த நீதிபதி கே.என்.பாஷா ஆணையம், ஓராண்டாகியும் பரிந்துரைகளை அளிக்கவில்லை. இந்த ஆணையத்தின் செயல்பாட்டை விரைவுபடுத்தி, சட்டத்தை உருவாக்கும் நடவடிக்கையில் தற்போதைய அரசும் தீவிரம் காட்டவில்லை.



