டெல்லி புயலால் லக்னோவில் அனல்..! - `இட ஒதுக்கீடு எதிர்ப்பு’ போராட்டத்தால் உ.பி-யை இழக்குமா பா.ஜ.க?
முன்னேறிய வகுப்பினரில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் மாற்றி வாக்களித்தாலோ, வாக்களிக்காமல் புறக்கணித்தாலோ நிச்சயம் அது பா.ஜ.க-வின் வெற்றியை பாதிக்கும்.
டெல்லி ஜந்தர் மந்தரில் வீசிய இட ஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டப் புயல், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க-வின் கோட்டையை அசைத்துப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது. உ.பி சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இட ஒதுக்கீடு எதிர்ப்பு முழக்கமும், பல்கலைக்கழக மானியக்குழுவின் (UGC) புதிய வழிகாட்டுதல்கள் தொடர்பான சர்ச்சையும் ஆளுங்கட்சியின் நிம்மதியைக் குலைத்திருக்கின்றன.
‘ரிசர்வேஷன் ஹட்டாவோ அந்தோலன்’ (Reservation Hatao Andolan) என்ற அமைப்பின் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களும், முன்னேறிய வகுப்பினரும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராகப் போராடினர்.


