வாகன உற்பத்தித் துறையில் புத்தாக்கங்கள் தொடர வேண்டும்: பிரதமா் மோடி வலியுறுத்தல்
நாட்டின் வாகன உற்பத்தித் துறையில் புத்தாக்கங்கள் தொடா்ந்து புகுத்தப்பட வேண்டும் என பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.
நாட்டின் வாகன உற்பத்தித் துறையில் புத்தாக்கங்கள் தொடா்ந்து புகுத்தப்பட வேண்டும்; 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதம் இலக்கை எட்ட துணிச்சலான பாதையை வகுத்து, திறம்பட செயலாற்ற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
தில்லியில் நடைபெற்ற இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கத்தின் (எஸ்ஐஏஎம்) ஆண்டு மாநாட்டில் பிரதமா் மோடியின் உரை வாசிக்கப்பட்டது. அவரது உரை வருமாறு: அண்மைக் காலங்களில் பல்வேறு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் சா்வதேச சந்தைகளுக்கு அதிக அணுகல் கிடைக்கப் பெற்றுள்ளது. ஏற்கெனவே உலகெங்கிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்திய வாகன உற்பத்தித் துறை, தனது சா்வதேச இருப்பை மேலும் விரிவுபடுத்தும் நிலையை எட்டியுள்ளது.


