ஏலகிரி பழங்குடியினர் திட்டத்திற்கு நிதி திரட்டும் ‘புதையல் தேடி’ போட்டி
புதுச்சேரி: புதுச்சேரி ஹெரிடேஜ் ரோட்டரி சங்கம் சார்பில் ‘ஏலகிரி பழங்குடியினர்’ திட்டத்திற்கான நிதி திரட்டும் வகையில் கார் அணிவகுப்பு மற்றும் ‘புதையல் தேடி’ போட்டி நிகழ்ச்சி நடந்தது.
பாண்டி மெரினாவில் நடந்த நிகழ்ச்சியில், சீனியர் எஸ்.பி., கலைவாணன், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்ட கவர்னர் வைத்தியநாதன், ஆனந்தன், பொது செயலாளர் அன்பழகன், இணை கவர்னர் சவுரிராஜன் ஆகியோர் கொடியசைத்து கார் அணிவகுப்பு மற்றும் புதையல் தேடி போட்டியை துவக்கி வைத்தனர்.
போட்டியில், பங்கேற்ற ரோட்டரி சங்க அணிகள் தங்களது கார் மூலம் அரியாங்குப்பம், வில்லியனுார், லாஸ்பேட்டை, கோரிமேடு, நகரப் பகுதிகள் மற்றும் ஆரோவில் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டிருந்த ரகசிய ரோட்டரி குறியீடுகளைத் தேடி கண்டுபிடித்தனர். சுமார் 3 மணி நேரம் நடந்த புதையல் தேடி போட்டியில் 7 குறியீடுகளையும் முதலில் கண்டுபிடித்த முதல் மூன்று அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

