1964 புயலையே தாங்கிய தேவாலயம்... தனுஷ்கோடியில் இன்று இடிந்து விழுந்த ஒரு பகுதி
தனுஷ்கோடியில் 1964 புயலில் சேதமடைந்த தேவாலயத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. அழியும் நிலையில் உள்ள இந்த தேவாலயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் 1964-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் புயலில் சேதமடைந்த பழமையான தேவாலயத்தின் ஒரு பகுதி தற்போது இடிந்து விழுந்துள்ளது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படும் இந்த தேவாலயம் மேலும் சேதமடைந்து அழியும் நிலையில் இருப்பதால், வரலாற்றுச் சின்னமாக விளங்கும் இதனைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1900-களில் தனுஷ்கோடி முக்கியமான வர்த்தக நகரமாக விளங்கி வந்தது. அப்போது அங்கு வசித்த ஆங்கிலேயர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் வழிபாட்டிற்காக பவளப்பாறைக் கற்களால் தேவாலயமும், விநாயகர் கோவிலும் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 1964-ஆம் ஆண்டு தனுஷ்கோடியில் ஏற்பட்ட மிகப்பெரிய புயலில் ஒட்டுமொத்த நகரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு அழிந்தது. இந்த புயலின்போது தேவாலயத்தின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. இருப்பினும், பவளப்பாறைக் கற்களால் கட்டப்பட்டிருந்ததால் கட்டிடத்தின் ஒரு பகுதி உறுதியுடன் நின்று, அந்தப் பேரழிவின் எச்சமாக இன்றளவும் காணப்படுகிறது.


