ஜெயமோகன் எழுதும் `மேகங்களின் குரல்!’ 19 - பிறந்த மண்ணின் நேசம்!
அதெல்லாம் இல்லை. நான் இங்கே வருவது யாருக்குமே தெரியாது. ஊர்க்காரர்கள் யாரும் என்னைப் பார்த்தால்கூட அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள்
அன்றாடத்திலிருந்து அதீதம்!
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியிலிருந்து தெற்கே பெரும்பாலான ரயில்களுக்குப் பயணச்சீட்டுகள் கிடைப்பது மிக அரிது. ஆனால், ஒரு ரயிலில் எப்போதுமே பயணச்சீட்டு கிடைக்கும். அது ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ். ஏனென்றால், அது சென்னைக்குள் நுழையாது. ஜம்முவிலிருந்து கிளம்பி, டெல்லிக்குச் சென்று, ஜோலார்பேட்டை வழியாக மதுரை வரை வரும்.
அந்த ரயிலில் டெல்லியிலும், டெல்லியை ஒட்டிய பிற வடஇந்திய நகரங்களிலும் சாலைகளில் உணவகமோ, கடையோ வைத்திருப்பவர்கள், சிறு தொழில்களை நடத்துபவர்கள் என அடித்தள மக்கள்தான் இருப்பார்கள். ரயில் கிளம்பி சிறிது நேரத்திலேயே அந்தப் பெட்டி ஒரு சிறு கிராமம்போல ஆகிவிடும். பெண்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிப் பழகி, உரையாடிக்கொண்டிருப்பார்கள். ஆண்கள் சீட்டாடுவார்கள். ரயில் நிலையங்களில் இறங்கி, அங்கே ரகசியமாக விற்கப்படும் மதுவை அருந்திவிட்டு வருவார்கள். அரசியல் பேசுவார்கள். ஒவ்வொருவரும் இன்னொருவருக்கு முழுமையாகத் தெரிந்தவராக ஆகிவிடும்போது மதுரை வந்துவிடும். ரயில் நின்றதும் இறங்கும்போது சிலர் கண்ணீர்விட்டு அழுவதையும், கட்டித் தழுவிக்கொள்வதையும் பார்க்க முடியும்.



