பாறு கழுகை பாதுகாப்போம்:அது நம்மை பாதுகாக்கும்
இந்தியாவில் 9 வகையான பாறு கழுகுகள் உள்ளன. இதில் வெண்முதுகு, கருங்கழுத்து, மஞ்சள் முகம், செம்முகம் என 4 வகையான பாறு கழுகுகள் தமிழகத்தில் உள்ளன.
இந்த 4 வகை கழுகுமே அழியும் நிலையில் உள்ளன. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றிய பறவை, இப்போது நீலகிரி, ஈரோட்டை இணைக்கும் ஒரு காட்டு பகுதியில் மட்டுமே வசிக்கிறது என்கிறார், இக்கழுகின் பாதுகாப்புக்காக இயங்கும் அருளகம் அமைப்பின் செயலர் பாரதிதாசன்.
அவர் கூறியதாவது: 1990களுக்கு பிறகு பாறு கழுகுகளின் எண்ணிக்கை குறைய துவங்கியது. 10 ஆண்டுகளுக்குள் 90 சதவீதம் கழுகுகள் இறந்தன. கால்நடைக்கு வலி நிவாரணியாக பயன்படுத்தும் 'டைக்ளோபெனாக்' மருந்து தான் அழிவுக்கு காரணம் என தெரியவந்ததால் 2006ல் அரசு அந்த மருந்தை தடை செய்தது.


