அன்று ஹாக்கியை வேடிக்கை பார்த்த சிறுமி... இன்று தேசியப் போட்டிகளின் நடுவர்!
ஆறாம் வகுப்புல இருந்து ஹாக்கி விளையாட ஆரம்பிச்சேன். 7-ம் வகுப்புல பள்ளி மாணவர்களுக்கான ஹாக்கி பிரிவில ஒரே வருஷத்துலயே மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் விளையாட வாய்ப்பு கிடைச்சுது.
ஒரு காலத்தில் ஹாக்கி மைதானத்தை வேடிக்கை பார்த்தவர்... இன்று அதே மைதானத்தில் தேசியப் போட்டிகளுக்கு நடுவராக உருவெடுத்திருக்கிறார். வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் அரும்பருத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சோனியா. விவசாயக் குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்த இவரது உயரத்துக்குப் பின்னால் இருப்பது திறமை மட்டுமல்ல; அவரைத் தட்டிக்கொடுத்த உடற்கல்வி ஆசிரியரின் நம்பிக்கையும் உழைப்பும்கூடத்தான்.
“அப்பாவும் அம்மாவும் விவசாயம் செய்து என்னைப் படிக்க வெச்சாங்க. நான் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில படிச்சேன். 6-ம் வகுப்புக்காக எங்க கிராமத்துக்குப் பக்கத்துல இருக்கிற காரணாம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில சேர்ந்தேன். அந்தப் பள்ளியோட பி.டி சார்தான் மகேஷ். எங்க ஸ்கூல் மைதானத்துல சார் பயிற்சி கொடுத்து, மாணவர்கள் ஹாக்கி விளையாடிட்டு இருக்கிறதை வேடிக்கை பார்த்துட்டு இருப்பேன். அதைப் பார்த்து எனக்கும் விளையாடணும்னு ஆசை வந்துச்சு.


