விவசாயம் என்பது வருமானம் மட்டுமா? - நஞ்சில்லா உணவு நம்பிக்கை அளிக்கும் இளைஞர்!
‘விவசாயம் இனி பிழைப்புக்கு உதவாத தொழில்’, ‘எல்லா உணவும் நஞ்சாகிவிட்டது’ என்று பலரும் விரக்தியடைந்திருந்த நிலையில் வெளிச்சத்துக்கு வந்தார் நம்மாழ்வார். இயற்கை வேளாண் விவசாயம், ரசாயனக் கொல்லிகளின் பாதிப்பு என்று அவர் மேற்கொண்ட பிரசாரங்கள் பெரும் இளைஞர்கள் கூட்டத்தை வசப்படுத்தியது. இப்போதும் ‘ஐடி வேலையை விட்டு விவசாயத்துக்கு வந்தேன்’, ‘வெளிநாட்டிலிருந்து திரும்பி மதிப்புக்கூட்டல் செய்கிறேன்’ என்று பலர் சொல்வதற்குப் பின்னால் நம்மாழ்வாரின் தாக்கம் ஏதேனும் ஒரு வகையில் இருக்கும். அவர்களில் ஒருவர்தான் விஜய்.
‘‘புதுக்கோட்டை மாவட்டம், தெத்து வாசல்பட்டி கிராமம்தான் சொந்த ஊர். அப்பா, அம்மா மற்றும் இரண்டு தங்கைகளுடன் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். என் பெற்றோர் விவசாயத்தால் நிறைய சிரமப் பட்டவர்கள். இதனால் நாங்கள், நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்றே விரும்பினார்கள். கோயம்புத்தூரில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்க வைத்தார்கள். ஆனால், படிப்பை முடித்தபிறகு வேலைக்குச் செல்ல விருப்பம் இல்லை. நமது குடும்பம் வேளாண்மையைச் சார்ந்து இயங்குகிறது. நாம் ஏன் மற்ற தொழிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றுதான் ஊருக்கே வந்தேன்’’ என்கிற விஜய்க்கு, வீட்டிலும், ஊரிலும் ராஜமரியாதையா கிடைத்திருக்கும்? நாம் யூகிப்பதுதான் நடந்துள்ளது.
‘‘ஆரம்பத்தில் விமர்சனங்களை மட்டுமே சந்தித்தேன். ஆனாலும் கலங்கவில்லை. எங்கள் தோட்டத்தில் கரும்பு, வாழை, தர்பூசணி போன்ற பணப்பயிர்களையே பெரும்பாலும் சாகுபடி செய்தார்கள். ரசாயன உரங்கள் இல்லாமல் விவசாயம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தபோது காய்கறிகளையே பயிரிட விரும்பினேன். வீடுகளில் அதிகம் பயன் படுத்தப்படும் உணவுப்பொருளான காய்கறி களில்தான் ரசாயனமும் அதிகம் என்பதால் அந்த முடிவை எடுத்தேன். ஆரம்பத்தில் ‘இது முடியாது’ என்றார்கள். எங்கள் நிலத்தின் விளைச்சலே விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலாக மாறியது...’’



