கிடப்பில் வேப்பூரில் சூரிய மின் வேலி அமைக்கும் பணி கிடப்பில்: தடையாக இருப்போர் மீது விவசாயிகள் அதிருப்தி
வேப்பூர்: வேப்பூர் அருகே வனத்தையொட்டி சூரிய மின்வேலி அமைக்கும் பணி கிடப்பில் இருப்பதற்கு காரணமானஅரசியல் பிரமுகர், வனத்துறையினர் மீது விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். வேப்பூர் அடுத்த காட்டுமயிலூர் மற்றும் கிருஷ்ணாபுரத்தில், 55 சதுர கி.மீ., சுற்றளவில் 6,112 ஏக்கர் பரப்பில் அரசுக்கு சொந்தமான வனப்பகுதி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூரில் துவங்கி, வேப்பூர் கூட்டுரோடு வழியாக பெரியநெசலூர், அடரி, அரசங்குடி வரை வனப்பகுதி உள்ளது. இங்கு, மான், எறும்பு திண்ணி, குரங்கு, காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்ட வன உயிரினங்கள் வசிக்கின்றன. அவற்றின் உணவிற்கு புங்கை, நாவல் உட்பட பல வகை மரங்கள், பழச்செடிகள் உள்ளன. குடிநீருக்கு கான்கிரீட் தொட்டிகள், தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வனத்தையொட்டியுள்ள, 45க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆண்டுதோறும் மக்காச்சோளம், வரகு, நெல், மரவள்ளி, வேர்க்கடலை பயிர்களை சாகுபடி செய்கின்றனர். இந்நிலையில், வன விலங்குகள் உணவு, குடிநீருக்காக வனத்தை விட்டு வெளியேறி, விவசாய நிலங்களுக்குள் புகுந்து சாகுபடி பயிர்களை நாசம் செய்கின்றன. இதனால், ஆண்டுதோறும் வன விலங்குகளால் விவசாயிகள் பாதிக்கின்றனர்.
இதனை தடுக்க, வனத்தையொட்டி மின்வேலி அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
