மானாவாரி நிலங்களில் விதைப்பு பணிகள் துவக்க தயக்கம் :தென்மேற்கு பருவமழை கை கொடுக்காததால் சிரமம்
ஆண்டிபட்டி:தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கியதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் விதைப்பு பணிகள் துவக்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
விவசாயம் மட்டுமே முக்கிய ஆதாரமாக உள்ள தேனி மாவட்டத்தில் மழையை மட்டுமே நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் பெய்யும் கோடை மழையில் நிலங்களை உழுது உரமிட்டு விதைப்புக்கு தயார் நிலையில் வைப்பார்கள். ஜூலை, ஆகஸ்டில் துவங்கும் தென்மேற்கு பருவமழையில் விதைப்பு பணிகளை துவக்கி விடுவர்.
நடப்பு ஆண்டில் கோடை மழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் விவசாயிகளும் மானாவாரி நிலங்களில் கோடை உழவை தவிர்த்து விட்டனர். கடந்த சில வாரங்களில் அவ்வப்போது பெய்த மழையை பயன்படுத்தி உழவு பணிகளை மேற்கொண்டனர். தென்மேற்கு பருவமழை அடுத்தடுத்து பெய்து கை கொடுக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டு விதைப்பு பணிகளை துவக்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
