மெஸ்ஸி வருகை நிகழ்ச்சியில் மோசடி.. கேரளாவில் 5 இடங்களில் SIT சோதனை.. விசாரணையில் அடுத்தடுத்து திருப்பங்கள்!
கேரளாவில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்சியை அழைத்து வர ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் நிதி முறைகேடு மற்றும் வரி ஏய்ப்பு நடந்ததாக எழுந்த புகாரில், தனியார் டிவி அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்சி மற்றும் அர்ஜென்டினா அணியை அழைத்து வந்து சர்வதேச போட்டி நடத்தும் திட்டம் கடந்த ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான தனியார் ஸ்பான்சராக ரிப்போர்டர் பிராட்காஸ்டிங் கம்பெனி செயல்பட்டது. நிகழ்ச்சி தொடர்பாக அர்ஜென்டினா கால்பந்து சங்கத்திற்கு அதன் வசூல் முகவர் மூலம் சுமார் 126 கோடியே 4 லட்சம் ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டதாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நிதி மற்றும் ஒப்பந்த சிக்கல்கள் காரணமாக மெஸ்சி உள்ளிட்ட அர்ஜென்டினா அணியின் கேரள வருகை திட்டம் நிறைவேறவில்லை. இதுதொடர்பான விசாரணையில், வெளிநாட்டு பரிவர்த்தனைகளுக்கு செலுத்த வேண்டிய வரியில் சுமார் 25 கோடியே 78 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருக்கலாம் என சிறப்பு புலனாய்வுக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதையடுத்து ஏமாற்றுதல், மோசடி மற்றும் சதித்திட்டம் தொடர்பான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் புதன்கிழமை அதிகாலை SIT அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர்.


