Arts, culture, entertainment and media
மோகன்லாலின் “ஆப்ரேஷன் கங்கா” படத்தில் இணைந்த பார்த்திபன்

உண்மை சம்பவத்தை அடிப்படையா வைச்சு, இந்திய மாணவர்களை ஒரு பேராபத்திலிருந்து மீட்டதை எடுக்குற படத்தில ஒரு பங்கா இருக்கிறது மகிழ்ச்சியே என ‘ஆப்ரேஷன் கங்கா’ படத்தில் இணைந்த பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால், அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனர் விஷ்ணு மோகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘L367’ என்ற தலைப்பு வைக்கப்பட்டது.
விஷ்ணு மோகன், உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான ‘மேப்பாடியான்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்திற்காக அவருக்கு சிறந்த அறிமுக இயக்குனருக்கான தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து ‘கத இன்னுவரே’ திரைப்படத்தை இயக்கிய அவர், தற்போது மோகன்லாலை வைத்து ‘L367’ படத்தை இயக்குகிறார்.
‘L367’ படத்தின் கதைக்களம் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாக விஷ்ணு மோகன் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அதேசமயம், இது வழக்கமான ராணுவ பின்னணியிலான திரைப்படம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
மோகன்லால் நடிப்பில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். இந்த படத்திற்காக டைட்டிலை நடிகர் மோகன்லால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த படத்திற்கு ‘ஆப்ரேஷன் கங்கா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மோகன்லால் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்தில் தானும் நடிக்க இருப்பதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ ‘ஆப்ரேஷன் கங்கா’ 5 மொழிகளில் எடுக்குற பெருமைமிகு படத்தில 5 பேருல என் பேரும் இருந்தாலும், உண்மையான சந்தோஷம் என்னன்னா…. உண்மை சம்பவத்தை அடிப்படையா வைச்சு, 100 கணக்கான இந்திய மாணவர்களை ஒரு போர் ஆபத்தில் ஆக்சுவலா ஒரு பேராபத்திலிருந்து மீட்டதை மிகுந்த பொருட்செலவுல எடுக்குற படத்தில ஒரு பங்கா இருக்கிறது பக்கா மகிழ்ச்சியே!” என தெரிவித்துள்ளார்.
