Economy, business and finance
குளோபல் திருப்பூர் --- உலக பேஷன் நோக்கிப் பாயும் டாலர் சிட்டி செயற்கை இழை, ஏ.ஐ.,யில் புதிய சகாப்தம்
- நமது நிருபர் குழு - ஒரு காலத்தில், திருப்பூர் என்றால் பின்னலாடை... பின்னலாடை என்றால் பருத்தி... என்று உலகம்

ஒரு காலத்தில், 'திருப்பூர் என்றால் பின்னலாடை... பின்னலாடை என்றால் பருத்தி...' என்று உலகம் சொல்லிக்கொண்டிருந்தது. அந்த அடையாளத்தை இப்போது திருப்பூரே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
பழங்கரை, அணைப்புதூரில் உள்ள ஐ.கே.எப்.ஏ. வளாகத்தில் நேற்று தொடங்கிய சர்வதேச பின்னலாடை கண்காட்சி, துணிகளை மட்டும் காட்சிப்படுத்தும் இடமாக இல்லாமல், திருப்பூர் ஆடைத் தொழில் அடுத்து எங்கே செல்லப் போகிறது என்பதைச் சொல்லும் முன்னோட்டமாகவே காட்சியளிக்கிறது.
'செயற்கை இழை ஆடைகளில் புதுமை மற்றும் நிலையான வளர்ச்சி மூலமாக பேஷனின் எதிர்காலம்' என்ற மையக்கருத்துடன் நடைபெறும் இக்கண்காட்சியில், செயற்கை இழை ஆடைகள், மறுசுழற்சி செய்யப்பட்ட நுாலிழைகள், இயற்கை சாயங்கள், ஏ.ஐ. தொழில்நுட்பம் என, உலக ஆடை சந்தையின் அடுத்தகட்ட தேவைகளை பிரதிபலிக்கும் புதிய முயற்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஒரு பக்கம் செயற்கை இழை ஆடைகள்... இன்னொரு பக்கம் பருவநிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்படும் ஆடைகள்... உடலுக்கு வசதியாகவும், நவீன தோற்றத்துடனும் இருக்கும் வகையில் பாலியஸ்டர் ஆடைகளில் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் நிலவும் வெவ்வேறு பருவநிலைகளுக்கு ஏற்ப குழந்தைகள் உள்ளிட்டோருக்கான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. எம்ப்ராய்டரி, நுணுக்கமான டிசைன் வேலைப்பாடுகளுக்கும் உலக சந்தையில் வரவேற்பு உள்ளது.
'ஆடை தயாரித்தால் மட்டும் போதுமா... இந்த பூமிக்கும் ஏதாவது மிச்சம் வைக்க வேண்டாமா?' என்ற கேள்விக்கும் கண்காட்சி பதில் சொல்கிறது. காய்கறிக் கழிவுகளில் இருந்து இயற்கை சாயம் தயாரித்து, 'பூஜ்யம் கெமிக்கல்' முறையில் ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. பெட் பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு நாராகவும், உயர்தர நுாலாகவும் மாறி, அதிலிருந்து ஆடைகள் உருவாகின்றன.
பருத்தி, மறுசுழற்சி செய்யப்பட்ட பருத்தி, ஆர்கானிக் பருத்தி, பாலியஸ்டர் என பல்வேறு கலவைகளிலும் சூழல் நட்பு ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பொருட்களுக்கு மாற்றாக, கண்காட்சி அரங்குகளைக்கூட மறுபயன்பாடு செய்யும் வகையில் வடிவமைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆடை வடிவமைப்பில் மட்டுமல்ல... தையல் இயந்திரத்திலும் தொழில்நுட்பம் புகுந்துவிட்டது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தையல் இயந்திரத்தின் வேகம், தொழிலாளர் பணிபுரியும் நேரம் உள்ளிட்ட விவரங்களை துல்லியமாக பதிவு செய்து, ஆயிரக்கணக்கான இயந்திரங்கள் இயங்கினாலும் ஒவ்வொரு தொழிலாளியின் பணித்திறனையும் கண்காணிக்க முடியும்.
தற்போது சராசரியாக 55 சதவீதமாக உள்ள உழைப்புத் திறனை 85 சதவீதம் வரை உயர்த்த முடியும் என்கின்றனர் தொழில்நுட்ப நிறுவனங்கள். இதன் மூலம் உற்பத்தித் திறனுடன், தொழிலாளர்களின் திறனையும் மேம்படுத்த முடியும்.
உலக வர்த்தகத்தின் கதவும் திருப்பூருக்கு அகலமாகத் திறக்கத் தொடங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகளுடன் எதிர்பார்க்கப்படும் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட புதிய வர்த்தக வாய்ப்புகள், திருப்பூர் ஆடைத் துறையின் ஏற்றுமதிக்கு புதிய பாதையை உருவாக்கும் என தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
சீனாவுடன் விலை போட்டி போடும் அளவுக்கு பாலியஸ்டர் ஆடைகளை தயாரிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் திருப்பூர் நிறுவனங்கள் வெளிப்படுத்துகின்றன. அதே நேரத்தில், உலகளவில் செயற்கை இழை ஆடைகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், பருத்தியை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையிலிருந்து செயற்கை இழையை நோக்கி திருப்பூர் நகர்ந்து வருகிறது.
ஆக, இந்தக் கண்காட்சி வெறும் ஆடைகளின் அணிவகுப்பு அல்ல. செயற்கை இழையில் புதுமை, உற்பத்தியில் தொழில்நுட்பம், தயாரிப்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என, 'பேஷனின் எதிர்காலம்' எப்படி இருக்கப் போகிறது என்பதை இங்கே காண முடிகிறது.
பருத்தியில் தொடங்கிய திருப்பூர், செயற்கை இழையை அணிந்து, தொழில்நுட்பத்தைத் தழுவி, நிலைத்தன்மையை முன்னிறுத்தி, உலக சந்தையின் அடுத்த தலைமுறை ஆடைகளை உருவாக்க தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தின் முகமாகவே இந்த சர்வதேச பின்னலாடை கண்காட்சி அமைந்துள்ளது.
தொழில்நுட்பப் புதுமை, சூழல் பாதுகாப்பு, சர்வதேச தரம் என புதிய பாதையில் வேகமெடுத்து வருகிறது திருப்பூரின் பின்னலாடைத் தொழில்!தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை துல்லியமாகக் கண்காணித்து மேம்படுத்தும் ஏ.ஐ. கருவிகள், மறுசுழற்சி செய்யப்பட்ட நார் மற்றும் பருத்தி, இயற்கை சாயங்கள், வசதியை மேம்படுத்திய பாலியஸ்டர் ஆடைகள் என அடுத்த தலைமுறை உற்பத்தி முறைகள்கவனம் ஈர்க்கின்றன.அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலகச் சந்தைகளின் தேவைக்கேற்ப பருவநிலை ஆடைகள் முதல் குழந்தைகளுக்கான பிரத்யேக ஆடைகள் வரை தயாரிக்கும் நிறுவனங்கள், சீனாவுக்கு விலையில் சவால் விடும் அளவுக்கு போட்டித்திறனை வளர்த்துள்ளதுடன், சுற்றுச்சூழல் நட்பு உற்பத்தியிலும் புதிய முத்திரை பதித்து வருகின்றன. இதனை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற ஐ.கே.எப். கண்காட்சி, திருப்பூரின் பின்னலாடைத் துறை எதிர்கொள்ளும் புதிய வாய்ப்புகளையும், உலகச் சந்தையை வசப்படுத்தும் அதன் அடுத்தகட்ட பயணத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
அரவிந்தராசு, தொழில்நுட்ப இயக்குநர், டெக்ஸ்பிளஸ்:தையல் இயந்திரங்களில் பொருத்தப்படும் எங்களின் 'ஏஐ எம்படட்' கருவி, தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, பணித்திறனை உயர்த்த உதவுகிறது.தொழிலாளர்களின் உழைப்புத் திறனை நிர்வாகம் துல்லியமாக அறிய முடியாத நிலையும், முழு உழைப்பை கொடுத்தும் தகுந்த பலன் கிடைக்கவில்லை என்ற தொழிலாளர்களின் ஆதங்கமும் இருக்கலாம்.தையல் மிஷினின் வேகம், வேலை செய்யும் நேரம் உள்ளிட்ட விவரங்களை இந்த சாதனம் துல்லியமாக பதிவு செய்வதால், இரு தரப்புக்கும் இடையே வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். ஒரே தளத்தில் 4,000 தையல் இயந்திரங்கள் இயங்கினாலும், ஒவ்வொரு தொழிலாளியின் பணித்திறனையும் கண்காணிக்க முடியும். இதன் மூலம் அனுபவமிக்கவர்கள், புதியவர்கள் என அவர்களின் திறனை அறிந்து, தேவையான பயிற்சியும் தகுதிக்கேற்ற வேலையும் வழங்க முடியும்.தற்போது ஆடை உற்பத்தித் துறையில் தொழிலாளர்களின் உழைப்புத் திறன் சராசரியாக 55 சதவீதமாக உள்ளது. இந்த ஏ.ஐ. சாதனத்தை பயன்படுத்துவதன் மூலம் அதை 85 சதவீதம் வரை உயர்த்த முடியும். இதனால் நிறுவனத்தின் வளர்ச்சியுடன், தொழிலாளர்களின் பொருளாதார நிலையும் மேம்படும்.
சிவப்பிரகாசம், இன்டீரியர் டெகரேஷன், யுனிவர்சல் அசோசியேட்ஸ்:ஐ.கே.எப். கண்காட்சியில் பங்கேற்கும் வர்த்தகர்கள், தங்களது நிறுவனத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் கம்பீரமான காட்சி அரங்குகளை அமைக்க விரும்புகின்றனர். இது, அந்த நிறுவனங்களின் மீதான மதிப்பை வர்த்தகர்கள் மத்தியில் அதிகரிக்கிறது.பல லட்சம் ரூபாய் செலவில் பிரத்யேகமாக உருவாக்கப்படும் காட்சி அரங்குகளை, கண்காட்சி முடிந்த பிறகும் அவர்களது நிறுவனங்களுக்கு எடுத்துச் சென்று மீண்டும் பயன்படுத்துகிறோம். இதனால் நிறுவனங்களுக்கு புதிய வர்த்தகர்களை ஈர்க்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளக்ஸ் போன்ற பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கின்றன. அதை தவிர்க்கும் வகையில், காட்சி அரங்குகளை மறுபயன்பாடுசெய்து, சுற்றுச்சூழல் நிலைத்தன்மையையும் உறுதி செய்கிறோம்.
சர்வதேச டிரெண்ட்... பின்னலாடை நகரின் பிரண்ட்
''செயற்கை இழை, பாலியஸ்டர் மற்றும் குறிப்பாக குழந்தைகளுக்கான ஆடைகள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இவை பெருமளவில் பிரிட்டன், அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அங்கு நான்கு பருவநிலைகள் இருப்பதால், அந்தந்த சீசனுக்கு ஏற்ற ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எம்ப்ராய்டரி மற்றும் நுணுக்கமான டிசைன் வேலைப்பாடுகளுக்கும் வரவேற்பு உள்ளது,'' என்றனர் பாப்பீஸ் ஆடை உற்பத்தி நிறுவனத்தினர்.
ஜான் ரெட்ரிக்ஸ், புரொடக்ஷன் ஹெட், கே.எம். நிட்வேர்ஸ்:பாலியஸ்டர் ஆடைகள் வெப்பமாக இருக்கும், தோல் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எண்ணம் உள்ளது. இதை மாற்றும் வகையில், யு.வி., பாதுகாப்பு, ஈரப்பதத்தை விரைவாக உறிஞ்சும் திறன், அதிக காற்றோட்டம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களுடன் ஆடைகளை தயாரிக்கிறோம். இதனால் பாலியஸ்டர் ஆடைகளும் பருத்தி ஆடைகளைப் போன்று அணிவதற்கு வசதியாக இருக்கும்.
கார்த்திக் அகஸ்தியன், சீனியர் டிசைனர், எஸ்.டி. கார்மென்ட்ஸ்:காய்கறிக் கழிவுகளில் இருந்து இயற்கை சாயம் தயாரித்து, 'பூஜ்யம் கெமிக்கல்' முறையில் ஆடைகளை உற்பத்தி செய்கிறோம். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ரசாயனமற்ற ஆடைகளுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. பருத்தியுடன் பாலியஸ்டர் கலப்பது, மறுசுழற்சி செய்யப்பட்ட பருத்தியை பயன்படுத்துவது, ஆர்கானிக் பருத்தியை பயன்படுத்துவது என பல்வேறு சூழல் நட்பு முறைகளில் கவனம் செலுத்தி வருகிறோம்.
திலீப், டிசைனிங் ஹெட், ஆர்ம்ஸ்ட்ராங் நிட்டிங் வேர்:பெட் பாட்டில்களை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்படும் நாரில் இருந்து உயர்தர நுால் தயாரித்து, அதன் மூலம் ஆடைகளை உற்பத்தி செய்கிறோம். இவை தரப்பரி சோத னைக்கு உட்படுத்தப்படுவதால் பாதுகாப்பானவை. ம.பி.,யில் புலிகள் நடமாடும் வனப்பகுதிகளுக்கு இடையே உள்ள கிராமங்களில் விவசாயிகள் பயிரிடும் பருத்தியை ஊக்குவிக்கும் வகையில் கொள்முதல் செய்து, அதில் ஆடைகளை தயாரிக்கிறோம். இதற்கு 'டைகர் காட்டன்' என பெயரிட்டுள்ளோம்.
அருண், மேலாளர், வால்ரஸ்சீனாவை விட குறைந்த விலையில் பாலியஸ்டர் ஆடைகளை தயாரித்து வழங்க முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான ஆடைகள், விளையாட்டு ஆடைகள் என பல்வேறு ரகங்களை சீனாவுக்கு போட்டியாக திருப்பூரிலேயே தயாரிக்க முடியும் என்பதை எங்கள் நிறுவனம் நிரூபித்து வருகிறது.
முதன்முறையாக ஐ.கே.எப்., கண்காட்சியில் அரங்கு அமைத்துள்ளோம். ஆடை வடிவமைப்பு முதல் அச்சிடுதல், பதப்படுத்துதல், தையல் வரை அனைத்து பணிகளையும் ஒரே தொழிற்சாலை வளாகத்தில் மேற்கொள்கிறோம்.அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். பின்னலாடை வர்த்தகத்தின் உலகளாவிய மையமாக திருப்பூர் விளங்குவதால், முதன்முறையாக இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளோம்மின் கண்காணிப்பு''ஆடை உற்பத்தியில் ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்பதை தனித்தனியாக கண்காணிக்க முடியும். அதிக மின்சாரம் பயன்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் செயல்பாடுகளை கண்டறிந்து மாற்றங்கள் செய்வதன் மூலம் செலவை குறைக்கலாம்.மின் பயன்பாட்டையும் உற்பத்தித் தரவையும் இணைத்து பார்ப்பது நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்'', என்கின்றனர் தொழில் துறையினர்.
ஏ.ஐ. தான் எல்லாமே!
சக்திவேல், தலைவர், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.):
ஆடை வடிவமைப்பில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பயன்பாடு தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. உலக சந்தையின் தேவைக்கு ஏற்ப புதிய டிசைன்களை உருவாக்குவதிலும், ஆடை தயாரிப்பை மேம்படுத்துவதிலும் ஏ.ஐ., முக்கிய பங்கு வகிக்கிறது. 'ஈஸ்ட்மேன்' உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் ஆடை தயாரிப்பை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன.திருப்பூர் ஏற்றுமதியாளர்களும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். ஏற்றுமதி ஆடை வர்த்தகத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை புகுத்துவது தொடர்பாக, ஏ.இ.பி.சி. சார்பில் தொழில் நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுப்ரமணியன், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்:
உலகளவில் ஆடை தயாரிப்பில் 80 சதவீதம் செயற்கை நுாலிழையும், 20 சதவீதம் பருத்தியும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், திருப்பூரில் இதற்கு நேர்மாறாக, 80 சதவீதம் பருத்தியும், 20 சதவீதம் மட்டுமே செயற்கை நுாலிழையும் பயன்படுத்தப்படுகிறது.உலக சந்தையின் தேவையை கருத்தில் கொண்டு, திருப்பூரில் செயற்கை நுாலிழை பயன்பாட்டை ஆண்டுக்கு 5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 2030க்குள், திருப்பூரின் ஆடை உற்பத்தியில் 50 சதவீதம் செயற்கை நுாலிழை பயன்பாடு என்ற இலக்கை அடைய முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
சர்வதேசத் தரத்துடன்...
இளங்கோவன், தலைவர், அனைத்து ஜவுளி ஏற்றுமதி வர்த்தக முகமைகள் கூட்டமைப்பு:
ஐரோப்பிய நாடுகளுடன் வரும் ஜனவரி முதல் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, திருப்பூரின் ஆடை ஏற்றுமதி 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.பருத்தி விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், ஏற்றுமதி வர்த்தகத்தை பாதிக்கின்றன. இதற்கு செயற்கை நுாலிழை பயன்பாட்டை அதிகரிப்பது ஒரு முக்கிய தீர்வாக இருக்கும். சர்வதேச சந்தையின் தேவைக்கு ஏற்ப, வழக்கமாக நடத்தப்படும் கண்காட்சியை விட, இந்த முறை அரங்குகள் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளன.உலக வர்த்தகத்தின் புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி, தொழில்நுட்பத்திலும் உற்பத்தியிலும் மாற்றத்தை கொண்டு வந்தால், வரும் 2030க்குள் ஒரு லட்சம் கோடி ரூபாய் வர்த்தக இலக்கை திருப்பூர் எட்டும் வாய்ப்பு உள்ளது.
