Crime, law and justice
நிழற்குடை முன் நிறுத்தப்படும் ஆட்டோக்கள் சுங்குவார்சத்திரத்தில் பயணியர் அவதி
ஸ்ரீபெரும்புதுார், செப். 11– சுங்குவார்சத்திரத்தில் நிழற்குடை முன் நிறுத்தப்படும் ஆட்டோக்களால், பேருந்து

சுங்குவார்சத்திரத்தில் நிழற்குடை முன் நிறுத்தப்படும் ஆட்டோக்களால், பேருந்து பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
சுங்குவார்சத்திரம் நான்கு சாலை சந்திப்பில், காஞ்சிபுரம் செல்லும் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர், இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, காஞ்சிபுரம், வேலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ – மாணவியர் உட்பட பலதரப்பட்ட மக்களும் இந்த பேருந்து நிறுத்ததை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிறுத்தத்தில் பயணியருக்கு இருக்கை வசதியுடன் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அப்பகுதியில் இயங்கிவரும் ஆட்டோக்கள் பயணியர் நிழற்குடை முன் ஆக்கிரமித்து நிறுத்தி வருகின்றனர்.
இதனால், நிழற்குடையை பயணியர் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், சாலையோரம் வெயிலில் பேருந்திற்காக பயணியர் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
குழந்தைகள், பெண்கள், வயதானோர் என, அனைவரும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே, நிழற்குடை முன் நிறுத்தப்படும் ஆட்டோக்கள் மீது, சுங்குவார்சத்திரம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.