Crime, law and justice
நெடுங்கல் கூட்டுச்சாலை சந்திப்பில் நிழற்குடை அமைக்க வேண்டுகோள்

அச்சிறுபாக்கம்: நெடுங்கல் கிராம கூட்டுச்சாலை சந்திப்பில், நிழற்குடை அமைக்க வேண்டுமென, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்கல் ஊராட்சியில், 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அச்சிறுபாக்கம் அருகே உள்ள வெளியம்பாக்கம், கரசங்கால், கொங்கரை, ஒரத்தி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக, வந்தவாசி செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.
இதில், நெடுங்கல் கூட்டுச்சாலை சந்திப்பு முக்கிய பகுதியாக உள்ளது. மதுராந்தகத்தில் இருந்து முருங்கை கிராமத்திற்கு இயக்கப்படும், தடம் எண்: ‘12ஏ’ அரசு பேருந்து, இந்த கூட்டுச்சாலை வழியாக செல்கிறது.
ஆனால், நெடுங்கல் கூட்டுச்சாலை சந்திப்பில் பயணியர் நிழற்குடை வசதி இல்லை. இதனால், வெயில் மற்றும் மழையில் நனைந்து பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, நெடுங்கல் கூட்டுச்சாலை சந்திப்பில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.