Politics
இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு யாருக்கு? - மாநில செயலாளர் சண்முகம் பதில்!

இடைத்தேர்தல் தொடர்பாக கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் விவாதித்து நாளை முடிவு அறிவிக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமைச் செயலகம் விவகாரத்தில் பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் எனவும் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்தில் எந்தவித பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
வடசென்னை மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேறக்கோரி மாநகராட்சி வடக்கு வட்டார ஆணையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று செய்தியாளர்களை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், "புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு அவசர அவசரமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தலைமை செயலகம் மற்றும் அரசு அலுவலக கட்டுமானம் என்பது நீண்ட நாட்களுக்கு ஆனது. அதை அவசர கதியில் செய்யக்கூடாது” என கேட்டுக்கொண்டார்.
பட்டினப்பாக்கத்தில் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை சுற்றி இருக்கக்கூடிய மீனவ கிராமங்கள் இதற்கு எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு அரசு செவி சாய்க்க வேண்டும். பல்வேறு கட்சிகள், பல்வேறு கருத்துகளை முன்வைத்து இருக்கின்றனர். இதில் ஒருமித்த கருத்தை எட்ட தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும். பொருத்தமான இடத்தை, அனைவருக்கும் ஏற்கத்தக்க ஒரு இடத்தை கண்டறிய வேண்டும். அதுவரை தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கக்கூடிய இடத்தில் எந்தவித பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் நீதிபதி கோகுல்தாஸ் அறிக்கையில் இந்த நிகழ்விற்கு காரணமான அதிகாரிகள் அனைவரது மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தற்போதும் தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிக அளவில் தொடர்ந்து இருந்து வருகிறது. அவ்வப்போது போதைப் பொருள் பறிமுதல் என்ற செய்திகள் வந்தாலும், போதை பொருட்கள் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. காவல்துறை ஒத்துழைப்பு அல்லது அவர்களுக்கு தெரியாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து இங்கு போதைப்பொருள் வருகிறது என்பதை நம்ப தகுந்ததாக இல்லை. கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஏற்கனவே, அருணா ஜெகதீசன் அறிக்கையின் மீது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது திமுக அரசும், தற்போதுள்ள அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. அறிக்கைகள் பெறுவதும், அதை கிடப்பில் போடுவதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
தொடர் விடுமுறையை பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அபரிவிதமாக கட்டணத்தை உயர்த்தி, கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அராஜகமான, அடாவடித்தனமான நடவடிக்கையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு அபரிவிதமான கட்டண உயர்வை கட்டுப்படுத்துவதோடு, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
