Religion
கும்பாபிஷேகத்திற்காக நவீன கட்டுப்பாடு மையம்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷகேத்தையொட்டி பக்தர்களின் பாதுகாப்புக்காக நவீன கட்டுப்பாட்டு மையம் செயல்பாடுகளை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா பார்வையிட்டார்.
இக்கோயில் கும்பாபிஷேகம் செப்.17 ல் நடக்க உள்ளது. முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் நேற்று பார்வையிட்டார். போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மாநகராட்சி கமிஷனர் கவுரவ்குமார் உடனிருந்தனர். புதுமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள், கண்காணிப்பு அமைப்புகளை பார்வையிட்டவர், பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக நுழைவு, வெளியேறும் வழிகள் மற்றும் வழிகாட்டி பலகைகளை தெளிவாக அமைக்க உத்தரவிட்டார்.
சித்திரை, ஆவணிமூல, மாசிவீதிகளில் துாய்மையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், கழிப்பறை, சுகாதார வளாகங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். வாகன நிறுத்துமிடம், சாலை சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தினார். அனைத்து வீதிகளிலும் போதிய குப்பைத் தொட்டிகளை வைப்பது, தற்காலிக காலணி பாதுகாப்பகங்களை பராமரிப்பது குறித்தும் அறிவுறுத்தினார்.
மின்வழித்தடங்கள், மின்மாற்றிகளை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், கும்பாபிஷே கம் தொடர்பான வழிகாட்டுதல், தகவல்கள், அவசர உதவிகளை பொதுமக்கள் எளிதாக பெற ஏற்பாடுகளை செய்தார்.
டி.ஆர்.ஓ., சக்திவேல், ஆவின் பொதுமேலாளர் முத்துமாதவன், மாநகராட்சி துணை கமிஷனர் ஜெய்னுலாபுதீன், போலீஸ் துணை கமிஷனர்கள் இனிகோ திவ்யன், வனிதா, உதவி கமிஷனர் வேல்முருகன், ஆர்.டி.ஓ., கருணாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.