Crime, law and justice
கோவில் நிலத்தில் ஈ.வெ.ரா., சிலை மாற்றி நிறுவ இடமில்லை: கலெக்டர்
மதுரை: தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோவில் நிலத்தில் உள்ள ஈ.வெ.ரா., சிலையை, மாற்றி நிறுவ இடமில்லை என்றும், தனியார் நிலத்தில் அச்சிலையை மாற்ற, தி.க.,வினர் முன்வரவில்லை என்றும், உயர் நீதிமன்றத்தில், கலெக்டர் அறிக்கை அளித்துள்ளார்.
இக்கோவில் நிலத்தில் உள்ள ஈ.வெ.ரா., சிலை, கம்யூனிஸ்ட் கட்சி கொடிகம்பம் ஆகியவற்றை அகற்ற, மதுரை மாவட்டம், எழுமலை ராம.ரவிக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு மீது, ஏற்கனவே விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, 'கலெக்டர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு நேற்று விசாரித்தது. கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கை:
கண்டியூரில் 'சர்க்கார் புறம்போக்கு' என வகைப்படுத்தப்பட்ட சர்வே எண்ணில் சிலை உள்ளது. கிராம கணக்குகளான 'அ' பதிவேடு மற்றும் அடங்கல் குறிப்புரையில் 'கோவில்' எனவும் 'பிரம்மசிரகண்டீஸ்வரர் கோவில்' என்றும் பதிவு செய்யப் பட்டுள்ளது.
அச்சிலை, 1990ல் சாலையோரத்தில் நிறுவப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்கு முன், சாலை விரிவாக்க பணியின் போது, சிலை இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போதுள்ள இடத்தில் அமைக்கப்பட்டது.
கண்டியூர் ஊராட்சி, வெள்ளாளர் தெரு கிளை நுாலகம் அருகில் சிலையை இடமாற்றம் செய்ய, தி.க.,வைச் சேர்ந்த ஒருவர் கோரிக்கை விடுத்தார். அது, ஊராட்சிக்கு சொந்தமான பொது இடம்.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுகளின்படி, சிலைகள், கொடிக்கம்பங்கள், நினைவு சின்னங்களை, எந்த ஒரு பொது இடத்திலும் இடமாற்றம் செய்து நிறுவ முடியாது.
கோவிலுக்கு வெளியே அச்சிலையை நிறுவ மாற்று இடம் இல்லை. தி.க.,வினர் அச்சிலையை, அவர்கள் விரும்பும் தனியார் நிலத்திற்கு இடமாற்றம் செய்ய முன்வர சம்மதம் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அக்., 7க்கு ஒத்திவைத்தனர்.

