Politics
ரேவந்த் ரெட்டி Vs கொண்டா குடும்பம்... தெலங்கானாவில் வலுக்கும் அரசியல் மோதல்!

வாரங்கல் மாவட்டத்தில் காங்கிரஸின் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் ஒன்று, கொண்டா குடும்பம்.
“மரண தண்டனைக் கைதியிடம்கூட கடைசி நேரத்தில் விருப்பத்தைக் கேட்பார்கள்; ஆனால், எனக்கு அந்த வாய்ப்புக்கூட வழங்கவில்லை!” என்று கொந்தளிக்கிறார், தெலங்கானா அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட கொண்டா சுரேகா.
முதல்வர் ரேவந்த் ரெட்டியை, சுரேகாவின் மகள் சுஷ்மிதா கடுமையாக விமர்சித்துப் பேசியதுதான் இந்த அரசியல் புயலுக்குக் காரணம். ஆனால், ‘இது வெறும் மகள் பேசிய விவகாரமா... அல்லது தெலங்கானா காங்கிரஸுக்குள் நீண்ட நாள்களாகப் புகைந்துகொண்டிருந்த மோதல் வெடித்துக் கிளம்பியிருக்கிறதா?’ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
2017-ல் தெலுங்கு தேசத்திலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ரேவந்த் ரெட்டி, ராகுல் காந்தியுடனான நெருக்கத்தால் வேகமாக வளர்ந்து, 2023 தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல்வரானார். இப்போது, ரேவந்த் ரெட்டிக்கு எதிராக பகிரங்கமாகக் குரல் கொடுத்திருக்கிறது கொண்டா குடும்பம். மகளின் வார்த்தைகள்... தாயின் பதவி பறிப்பு... அடுத்ததாக பா.ஜ.க-வின் அரசியல் கணக்கு என தெலங்கானாவில் அடுத்தடுத்த திருப்பங்கள்!
இது குறித்து நம்மிடம் பேசிய தெலங்கானா காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள், “பாரம்பர்ய காங்கிரஸ் நிர்வாகிகளை ஓரங்கட்டி, ரேவந்த் ரெட்டி தனக்கென ஆதரவுக் கூட்டத்தை வளர்த்துக் கொண்டு, அவர்களுக்குப் பதவிகள் வழங்குகிறார். குடும்பத்தினரின் தொழில் நலன்களுக்கு அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆரம்பகாலத்தில் ஏ.பி.வி.பி-யில் அரசியல் கற்றவர் என்பதால், பா.ஜ.க-வினருடன் நெருக்கம் காட்டுகிறார். பிரதமர் மோடியை ‘என் அண்ணன்’ என்று புகழ்ந்தது குறித்தும் புகாரளிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை இல்லை” என்றனர்.
கொண்டா குடும்பம் Vs ரேவந்த் ரெட்டி!
அவர்களே தொடர்ந்து, “வாரங்கல் மாவட்டத்தில் காங்கிரஸின் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் ஒன்று, கொண்டா குடும்பம். மூத்த தலைவரான கொண்டா முரளிக்குக் கடந்த தேர்தலில் சீட் கிடைக்காத நிலையில், அவரின் மனைவி சுரேகா அமைச்சரானார். இதற்கிடையே, கொண்டா குடும்பத்தின் அடுத்த தலைமுறையாக சுஷ்மிதா அரசியலில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார். பரகால் தொகுதியைக் குறிவைத்து அவர் தயாராகிவரும் நிலையில், சமீபத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில் ரேவந்த் ரெட்டி, ‘சிட்டிங் எம்.எல்.ஏ ரேவூரி பிரகாஷ் மீண்டும் பெரிய வெற்றிபெறுவார்’ என்று பேசினார்.
இதையடுத்து ஆகஸ்ட் மாத இறுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுஷ்மிதா, ‘தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கே ரேவந்த் ரெட்டி ஆதரவளிக்கிறார். வேட்பாளர்கள் குறித்து கட்சித் தலைமை அதிகாரபூர்வ முடிவு எடுக்காத நிலையில், ரேவந்த் ரெட்டி எப்படி முன்கூட்டியே ஒருவரை வேட்பாளர்போல அறிவிக்க முடியும்... வரும் தேர்தலில் காங்கிரஸ் எனக்கு சீட் தரவில்லை என்றால், பரகால் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவேன். பரகால் தொகுதியில் வயதான வேட்பாளரை ஆதரிப்பது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினார்.
அத்துடன், ‘ரேவந்த் ரெட்டியின் அரசியல் வளர்ச்சியில் என் தந்தை கொண்டா முரளிக்கு முக்கியப் பங்கு உண்டு. ரேவந்த் ரெட்டி முதல்வரான பின்னர் என் தந்தைக்கு எம்.எல்.சி பதவி வழங்குவதாக உறுதியளித்தார். பின்னர் பல தலைவர்களுக்குப் பதவிகள் வழங்கப்பட்டபோதிலும், என் தந்தை புறக்கணிக்கப்பட்டார். ரேவந்த் ரெட்டியின் சகோதரர் தொடங்கிய நிறுவனம் ரூ.200 கோடி மதிப்பிலான நிலத்தை விதிமீறிப் பெற்றிருக்கிறது. என்னை அரசியல்ரீதியாக எதிர்க்க முயன்றால், முதல்வரின் குடும்பம் தொடர்பான ஊழல் விவகாரங்களை வெளிப்படுத்துவேன்’ என்று காரசாரமாகப் பேசினார்” என்றனர்.
மகள் பேச்சு... தாய்க்கு நோட்டீஸ்!
சுஷ்மிதாவின் பேச்சைத் தொடர்ந்து, சுரேகாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கிடையே டெல்லிக்குச் சென்ற சுரேகா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவைச் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது அநீதியானது. அப்படி எடுத்தே ஆக வேண்டும் என்றால், முதலில் ரேவந்த் ரெட்டியின் செயல்பாடுகளை விசாரிக்க வேண்டும். `அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலிலும், அதற்குப் பிறகும் நானே முதலமைச்சராகத் தொடர்வேன்’ என்று ரேவந்த் ரெட்டி பேசியது சரியானதா... கட்சித் தலைமை அதிகாரபூர்வ முடிவு எடுப்பதற்கு முன்பே தனக்கு நெருக்கமானவர்களை வேட்பாளர்களாக அறிவிப்பது சரியா... என் மகள் தெரிவித்த கருத்துகளுக்கு என்னைப் பொறுப்பாக்க முடியாது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அனைவருக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளை கட்சித் தலைமை கடைப்பிடிக்க வேண்டும். மரண தண்டனைக் கைதியிடம்கூட கடைசி நேரத்தில் விருப்பத்தைக் கேட்பார்கள்; ஆனால், எனக்கு அந்த வாய்ப்புக்கூட வழங்கவில்லை” என்றார்.
சுரேகாவின் விளக்கத்தையும் மீறி, அவரை அமைச்சரவையிலிருந்து நீக்குவதற்கான பரிந்துரையை ஆளுநருக்கு ரேவந்த் ரெட்டி அனுப்பினார். அதன்படி, சுரேகா பதவியிழந்தார். இதற்கு பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
இதற்கிடையே, சுரேகா அல்லது சுஷ்மிதாவை தெலங்கானா பா.ஜ.க தலைவர் பதவிக்கு முன்னிறுத்த முயற்சிகள் நடப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தெலங்கானா காங்கிரஸில் பற்றியிருக்கும் இந்த நெருப்பு, தேர்தல் நெருங்க நெருங்க மேலும் கொழுந்துவிடும்போலிருக்கிறது!
