Politics
ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்காமல் புதிதாக ஆட்களை தேர்வு செய்ய எதிர்ப்பு
விருதுநகர்: மின் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் ஆக்காமல் டி.என்.பி.எஸ்.சி., மூலம் புதிதாக தேர்வு செய்வது நியாயமல்ல என மின் ஊழியர் மத்திய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழக மின்வாரியத்தில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. கம்பியாளர், உதவியாளர், மின் கணக்கீட்டாளர் உள்ளிட்ட பல பணியிடங்கள் காலியாக உள்ளதால் கூடுதல் பணிச்சுமை உள்ளது.
இதில் ஒப்பந்த ஊழியர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். த.வெ.க., தேர்தலுக்கு முன் தனது வாக்குறுதியாக 5 ஆண்டுகளுக்கு மேல் மின் வாரியத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்றது.
ஆனால் அறிவித்தபடி பணி நிரந்தரம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தேவையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட 5 ஆண்டுகள் என்ற கால அளவுக்கு டி.என்.பி.எஸ்.சி., மூலம் பணியிடங்கள் நிரப்புவதாக தெரிவித்துள்ளார். இது மின் ஒப்பந்த ஊழியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் சந்திரன் கூறியதாவது:
பெருகி வரும் விலைவாசியில் மின் ஒப்பந்த ஊழியர்கள் பணி, சமூக பாதுகாப்பு இன்றி பேரிடர் காலங்களில் துவங்கி பல்வேறு நேரங்களில் மின் வாரியத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளனர். இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. 2007க்கு பின் வினியோக வட்டத்திலும், 1999க்கு பின் அனல்மின் நிலையங்கள், உற்பத்தி வட்டங்களிலும் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
நம்பி எதிர்பார்த்த த.வெ.க., அரசும் தற்போது டி.என்.பி.எஸ்.சி., மூலம் எடுப்போம் என்பது நியாயமல்ல. பல ஒப்பந்த ஊழியர்கள் விரக்தியில் உள்ளனர். 7 டிரான்ஸ்பார்மர்களுக்கு ஒரு கம்பியாளர் இருக்க வேண்டும். ஆனால் இன்று கூடுதல் பணிச்சுமையில் பலர் உள்ளனர். எனவே மின்வாரியத்திற்காக உழைத்த ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்றார்.