Politics
தாராபுரம் இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில், தாராபுரம் (தனி) சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்- தொடர்பான, தேர்தல் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கலெக்டர் மனீஷ் நாரணவரே தலைமை வகித்தார். தேர்தல் பொது பார்வையாளர் அம்கோத்து ஸ்ரீ ரங்கநாயக், தேர்தல் காவல் பார்வையாளர் சுரேஷ் குமார் சாதிவே உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், ஒதுக்கப்பட்ட குழுக்கள் தங்களுக்குரிய இடங்களில் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். உரிய ஆவணங்களின்றி, நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் பணம் எடுத்துச் செல்வது, மதுபானங்கள் மற்றும் பிற பரிசுப் பொருட்கள் வழங்குவது குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் இருப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். வேட்பாளர்களால் செய்யப்படும் அன்றாட தேர்தல் செலவுகளை, தேர்தல் செலவு கண்காணிப்புக் குழுவினர் தினசரி கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ. கார்த்திகேயன், திட்ட இயக்குநர்கள் வாணீஸ்வரி (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), மதுரா (மகளிர் திட்டம்), ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.