Arts, culture, entertainment and media
மருத்துவ சுகாதார நிலையத்தில் போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை

புதுக்கோட்டை: மருத்துவ சுகாதார நிலையத்தில் மின்தடையால், மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில், சில நாட்களாக காலை மற்றும் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்தடை நிலவி வருகிறது.
இதனால் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மின்வெட்டு பிரச்னைக்கு, 'அரசு உரியதீர்வு காண வேண்டும்' என கோரிக்கை விடுத்து வந்தனர்.
கீரமங்கலம் பகுதியில், நேற்றுமுன் தினம் இரவு, மின்வினியோகம் தடைபட்டு, நீண்ட நேரமாக மின்சாரம் வராத நிலையில், அரசு மருத்துவ சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு, மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில், டாக்டர் சிகிச்சை அளித்தார். இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
