இந்தியா - திபெத் எல்லை வர்த்தகம்: 6 ஆண்டுகளுக்கு பின் தொடங்கியது
டேராடூன்:இந்தியா - திபெத் இடையே பாரம்பரிய லிபுலேக் கணவாய் எல்லை வழியாக ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வர்த்தகம் தொடங்கியுள்ளது.
நம் நாட்டின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பிதோரகர் மாவட்ட எல்லையில் இருந்து லிபுலேக் கணவாய் வழியாக சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் நாட்டுக்கு பல நுாறு ஆண்டுகளாக வர்த்தகம் நடந்து வருகிறது. 1962ல் இந்தியா - சீனா இடையே நடந்த போர் காரணமாக லிபுலேக் கணவாய் வழியே திபெத்துக்கான வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
அதன் பின் 1992ல் மீண்டும் இவ்வழியாக வர்த்தகம் நடந்தது. 2019ல் கொரோனா பெருந்தொற்று பரவியதால் லிபுலேக் கணவாய் வழியாக இந்தியா - திபெத் வர்த்தகம் மீண்டும் பாதிக்கப்பட்டது.
தற்போது ஆறு ஆண்டுகளுக்கு பின், சீனா அனுமதி அளித்ததால், லிபுலேக் கணவாய் வழியாக மீண்டும் வர்த்தகம் தொடங்கியுள்ளது. லிபுலேக் கணவாய் இந்திய - சீன எல்லையை பிரிக்கும் பகுதியாக திகழ்கிறது. இதில், ஒரு பகுதி நம் நாட்டின் கட்டுப்பாட்டிலும், எல்லைக்கு அப்பால் உள்ள தக்லாகோட் சீனாவின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
சீன தரப்பில் தற்போது அனுமதி தரப்பட்டதால், ஒன்பது வர்த்தகர்கள் உள்பட 17 பேர் கொண்ட இந்திய குழுவினர் லிபுலேக் கணவாய் பகுதியை கடந்து, திபெத்தின் தக்லாகோட் பகுதிக்கு வெற்றிகரமாக சென்றடைந்தனர்.
வர்த்தகத்திற்காக லிபுலேக் கணவாய் எல்லை திறக்கப்பட்டதால், தார்சுலா மற்றும் அதை சுற்றியுள்ள எல்லை கிராமங்களை சேர்ந்த வர்த்தகர்கள், சுமை துாக்குபவர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.