Weather
இடி, மின்னலுடன் கனமழை: தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு. சென்னை புறநகரிலும் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல்.

தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேனி, மதுரை, விருதுநகர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாளை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்கள், மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 11ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உள் தமிழகத்தில் வரும் 9ஆம் தேதி வரை பகல்நேர வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.