ரூ.1500 பணத்திற்காக மூதாட்டியை தாக்கிய கொடூர திருடன்.. எட்டயபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

தூத்துக்குடி எட்டயபுரத்தில் மூதாட்டி அனந்தம்மாளை தாக்கி கொள்ளையர்கள் தப்பினர். மூன்று வீடுகளில் திருட்டு, ரூ.1500 பணம், வெள்ளி கொலுசு கொள்ளை. போலீசார் விசாரணை.
இரவு நேரத்தில் வீடு புகுந்து மூதாட்டியை கொள்ளையர் கொடூரமாக தாக்கிவிட்டு தப்பியோட, வேதனையில் மூதாட்டி அழுது புலம்பிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள அய்யம்பெருமாள் தெருவில் அடுத்தடுத்து மூன்று வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சங்கர், அவரது சகோதரர் மாரிக்கண்ணன் மற்றும் சுந்தர் ஆகிய மூவரும் சென்னையில் வசிக்க, எட்டயபுரத்தில் உள்ள அவர்களின் பூர்வீக வீடுகளுக்குள் இரவு நேரத்தில் புகுந்த அடையாளம் தெரியாத நபர், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் சுந்தர் வீட்டில் மட்டும் ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் வெள்ளி கொலுசு திருடு போயிருப்பதாக கூறப்படுகிறது. கொள்ளை சம்பவத்தைத் தொடர்ந்து அந்த நபர், அருகில் வசிக்கும் 90 வயது மூதாட்டி அனந்தம்மாள் வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கிவிட்டு தப்பியிருக்கிறார். தன்னை கொள்ளையர் பலமாக தாக்கி சித்திரவதை செய்ததாக மூதாட்டி கண்ணீருடன் தெரிவித்தார். எட்டையபுரம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் இச்சம்பவம் குறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
