செங்கல்பட்டு மாவட்டத்தில் காவல் உதவி மையங்கள் மூடுவிழா:அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்களால் மக்கள் அச்சம்

மறைமலை நகர்:செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள காவல் உதவி மையங்கள் செயல்படாததால், பைக் திருட்டு, நகை, மொபைல் போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, குற்றச்சம்பவங்களை தடுக்க காவல் உதவி மையங்களில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், காவல் கண்காணிப்பு மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனரகம் உள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில், 20 காவல் நிலையங்களும், தாம்பரம் போலீஸ் கமிஷனரக கட்டுப்பாட்டில், 25 காவல் நிலையங்களும் உள்ளன.
இவற்றில் கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், ஓட்டேரி, சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு தாலுகா, செங்கல்பட்டு நகர காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், அதிகளவில் குற்றச் சம்பவங்கள் நடக்கும் பகுதிகளாக உள்ளன.
இதை தடுக்க, அந்தந்த காவல் நிலையத்தின் எல்லைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், சில ஆண்டுகளுக்கு முன் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன. சுழற்சி முறையில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில், நான்கு போலீசார் பணியில் ஈடுபட்டு, வாகன தணிக்கை மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
குறிப்பாக, பண்டிகை காலங்களில் அனைத்து பகுதிகளிலும் போலீசாரை பிரித்து பணியில் ஈடுபடுத்த காவல் உதவி மையங்கள் உதவியாக இருந்தது. சில ஆண்டுகளாக காவல் உதவி மையங்கள் பயன்பாடின்றி வீணாகி வருகின்றன.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம், திருப்போரூர், மதுராந்தகம், மேல்மருவத்துார், மகேந்திரா வேர்ல்டு சிட்டி உள்ளிட்ட பகுதிகளில், தினமும் மொபைல் போன் பறிப்பு, பைக் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில், கல்லுாரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடப்பதாகக் கூறப்படுகிறது. இதை தடுக்க, சில ஆண்டுகளுக்கு முன், தனியார் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்., நிதி வாயிலாக 'சி.சி.டி.வி' கேமராக்கள் வசதியுடன் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன.
காவல் துறை அதிகாரிகள் மாறுதலுக்கு பின், இந்த மையங்கள் காட்சி பொருளாகவே உள்ளது. நெடுஞ்சாலையில் உள்ள காவல் மையங்களில், முதல்வர் மற்றும் கவர்னர் செல்லும் போது மட்டும் போலீசார் உள்ளனர்.
அதேபோல், மாத இறுதியில், விதிமீறி வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க மட்டுமே, இந்த பகுதியை போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, உயரதிகாரிகள் தலையிட்டு, காவல் உதவி மையங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட போலீசார் கூறியதாவது:
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம், கலெக்டர் அலுவலகம், நீதிமன்றங்கள், போராட்டம், பேரணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்படுகின்றனர். 50 ஆண்டுகளுக்கு முன் காவல் நிலையங்கள் தொடங்கிய போது இருந்த போலீசார் தான், தற்போதும் பணியில் உள்ளனர்.
கூடுதல் பணிச்சுமையுடன் வேலை பார்த்து வருகின்றனர். தமிழக அரசு தலையிட்டு, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கூடுதலாக போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காவல் உதவி மையங்கள், பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் இல்லை. பெரும்பாலும் மாத இறுதி நாட்களில், வாகன சோதனை நடத்தி வசூல் வேட்டை செய்ய மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்த காவல் உதவி மையங்களில் போலீசார் இல்லாததால், விபத்தில் சிக்கியவர்களை மீட்க காவல் நிலையத்தில் இருந்து போலீசார் வரும் வரை காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. விபத்தில் இறந்தவர்களின் உடலை மீட்பதிலும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். - ப.ஆனந்த், சமூக ஆர்வலர், மறைமலை நகர்.