கிணறு குடுங்க, ப்ளீஸ்.. விவசாயிகளிடம் கெஞ்சும் ஊராட்சிகள் குப்பை கொட்ட இடம் கிடைக்காமல் தவிப்பு
கோவை: கோவை மாநகராட்சி மட்டும் இல்லீங்க; குப்பை இல்லா ஊராக்குவோம் என்று அறிவிப்பு போர்டு வைத்த அத்தனை ஊராட்சிகளும் விழி பிதுங்கி நிற்கின்றன.: கிராம ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை பெரும் சவாலாக உள்ளது. வீடுகளில் சேகரிக்கும் குப்பை தரம் பிரிக்கப்படாமல், சாலையோரம் குளம் குட்டை புறம்போக்கு நிலங்களில் கொட்டப்படுகிறது.
மயிலம்பட்டி, முதலிபாளையம், குரும்பபாளையம், கரியாம்பாளையம், வெள்ளானைப்பட்டி போன்ற ஊராட்சிகளில் சாலையோர குப்பை குன்றுகள் அதிகம் தென்படுகின்றன. குப்பையை தரம் பிரித்து கொடுக்காத வீடுகளுக்கு அபராதம் விதிப்போம் என்று அறிவித்தும் பலன் இல்லை. நாடெங்கும் அமலுக்கு வந்துவிட்ட புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகள் பற்றி வீதி வீதியாக விழிப்புணர்வு பிரசாரம் செய்தும் நோ யூஸ்.
மக்கும் குப்பை, மக்காத குப்பை என 2 வகையாக குப்பையை பிரித்து தர சொன்னதையே மக்கள் இன்னும் செய்யவில்லை. அதற்குள் 4 வகையாக பிரித்து கொடு என்றால் எப்படி ஏற்பார்கள்?
”நான்கு கலர்களில் குப்பை தொட்டி கொடுத்தால் மறுக்காமல் வாங்கி வீட்டில் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால், குப்பை சேகரிக்க வீடு வீடாக போகும்போது, ஒரே பக்கெட்டில் மொத்த குப்பையையும் கொண்டு வந்து கொட்டுகிறார்கள்” என தூய்மை பணியாளர்கள் புலம்புகின்றனர்.
“எல்லாத்துக்கு சேத்து தான் வரி கட்டுகிறோம். அதனால், குப்பையை தரம் பிரிப்பது அரசாங்கத்தின், அதாவது உள்ளாட்சி அமைப்பின், பொறுப்பு” என்கின்றனர் மக்கள்.
இரு தரப்பினரும் மவுன யுத்தம் நடத்துவதால், ஊரே நாறுகிறது சாலையோரம் குவியும் குப்பைகளால். சமூக ஊடகத்தில் போட்டோவும் வீடியோவும் போட்டு கலாய்த்தனர். இப்போது வெளிநாடுகளிலும் அந்த காட்சிகள் பரவி, நாட்டின் மானத்தை கப்பல் ஏற்றுகிறது.
சேகரிக்கும் குப்பையை என்ன செய்வது என்பதிலும் மேலிடத்தில் தெளிவு இல்லாததால், மக்களுக்கும் அரசுக்கும் நடுவில் அதிகாரிகள் நசுங்குகிறார்கள். பக்கத்து ஊர் குப்பையை கொண்டு வந்து கொட்ட எந்த ஊர் மக்களும் குழி தோண்ட அனுமதிப்பது இல்லை. வெள்ளலூர் திருப்பூர் பிரச்னை தான் ஒவ்வொரு ஊரிலும்.
வெகு தீவிரமாக யோசித்த சில அதிகாரிகளுக்கு அபாரமான ஐடியா உதித்தது. போர்வெல் போட்ட பிறகு பயன்படுத்தாமல் விட்டு வற்றிப் போன பாசன கிணறுகளில் குப்பையை கொட்டி நிரப்பினால் என்ன? என்பது அந்த யோசனை.
இதற்கு வழி காட்டியதே விவசாயிகள் விடுத்த ஒரு கோரிக்கை தான். ”நிலத்தடி நீர் மட்டம் சரிந்து விட்டது. தடுப்பணைகளை தூர் வாரி மழை நீரை சேமித்தால், நீர்மட்டம் உயரும். வற்றிய பாசன கிணறுகளை தூர் வாரிய மண்ணால் மூடலாம்” என அவர்கள் கேட்டிருந்தனர்.
அதனால் அதிகாரிகள் கிணறு தேடி ஊர் ஊராக செல்கின்றனர். விவசாயிகளிடம் கேட்கின்றனர். பன்னிமடை, வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் இது சுறுசுறுப்பாக நடக்கிறது.
ஆனால் விவசாயிகள், ”குப்பையால் கிணறுகளை மூடினால் சுகாதார சீர்கேடு வரும், நிலத்தடி நீர் மாசுபாடும். ஏற்கனவே சில கிணறுகளில் பவுண்டரி கழிவை கொட்டுகின்றனர். இது நீர்வளத்தை பெரிதும் பாதிக்கும்” என்கின்றனர்.
குப்பைக்கு அழிவே கிடையாது என்று சும்மாவா சொன்னார்கள்?