Politics
பெண் வயிற்றில் 8 கிலோ கட்டி அகற்றம் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சாதனை
சிதம்பரம்: சிதம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 8 கிலோ கட்டி அகற்றப்பட்டது.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த 45 வயது பெண்ணுக்கு வயிற்று பகுதி வீங்கியது. இதையடுத்து அவர், சிதம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கடந்த மாதம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
வயிற்றில் கருப்பை முட்டைப்பை புற்றுநோய் இருப்பதற்கான சந்தேகத்தின் அடிப்படையில் முழுமையான மருத்துவ மற்றும் கதிரியக்க பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ பரிசோதனையி்ல் வயிற்று பகுதியில் பெரிய அளவிலான கட்டி இருப்பது தெரிந்தது.
இதையடுத்து கடந்த மாதம் 19ம் தேதி மருத்துவ குழுவினரால் அறுவை சிகிச்சை செய்து, 8 கிலோ எடையுள்ள பெரிய கட்டி அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத் துறை பேராசிரியர் மிருணாளினி வழிகாட்டுதல்படி புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ஜெயக்குமார், டாக்டர்கள், நீரஜா, சுகன்யா, சாய் மிருணாளினி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர்.
மயக்கவியல் சிகிச்சையை டாக்டர் சந்தோஷ் மாதவன் செய்தார். சிகிச்சை முடிந்து அந்த பெண், நேற்று முன்தினம் வீடு திரும்பினார். மருத்துவக் கல்லுாரி முதல்வர் பாஸ்கர், மருத்துவக் குழுவினரை பாராட்டினார்.