டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை கல்பாவிருக் ஷா பயிலரங்கம் தொடக்கம்
சென்னை: டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில், கண் மருத்துவ மாணவ – மாணவியருக்காக இரு நாள் பயிலரங்கம், மயிலாப்பூர் சவேரா ஹோட்டலில் நேற்று தொடங்கியது.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமம், கண் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில், முதுநிலை கண் மருத்துவ மாணவர்களுக்காக, தொடர் மருத்துவ கல்வி பயிலரங்கமான, ‘கல்பவிருக் ஷா’ செயல்திட்டம், மயிலாப்பூரில் நேற்று தொடங்கியது.
பத்தொன்பதாம் ஆண்டாக, இரு நாள் தொடர் மருத்துவ கல்வி பயிலரங்கில், நாடு முழுதும் இருந்து, 300க்கும் மேற்பட்ட இளம் டாக்டர்கள் மற்றும் 30க்கும் அதிகமான பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
இந்த பயிலரங்கத்தை, கர்நாடக மாநில மருத்துவ கல்வி இயக்ககத்தின் இயக்குனர் பி.எல்.சுஜாதா ரத்தோட் தொடங்கி வைத்தார். பயிலரங்கில் பங்கேற்ற இளம் டாக்டர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
டாக்டர் சுஜாதா ரத்தோட் பேசுகையில், ‘‘முதுநிலை மருத்துவ மாணவர்கள் அடிப்படை மருத்துவ அறிவும், மருத்துவ காரணங்களை ஆராய்ந்து அறிந்து கொள்ளும் திறனை பெற்றவர்களாகவும் மேம்பட வேண்டும். தேர்வுகளை தெளிவுடனும், தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ள தயார்படுத்தி கொள்ள, இந்த பயிலரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது,’’ என்றார்.
டாக்டர் அகர்வால்ஸ் அறக்கட்டளை தலைவர் சூசன் ஜேக்கப் பேசுகையில், ‘‘கண் மருத்துவ துறையில் தேசிய அளவிலான ஒரு முன்னணி முதுநிலை தொடர் மருத்துவ கல்வி நிகழ்வாக பயிலரங்கம் உள்ளது. முதுநிலை மருத்துவ படிப்புக்கு துணையாக இருப்பதோடு, திறமையான மற்றும் தன்னம்பிக்கை மிக்க கண் டாக்டர்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது,’’ என்றார்.