Politics
நாட்டை ஒருபோதும் விட்டு கொடுத்து விடாதீர்கள்: இளைஞர்களுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை

சென்னை: ''நாட்டின் தலைமை பொறுப்பு, இளைஞர்கள் கையில் இருக்க வேண்டும் . நாட்டை ஒருபோதும் விட்டு கொடுத்து விடக் கூடாது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
சென்னை திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ்., பல்கலை வளாகத்தில், டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலை பல்கலையின், 36வது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில், 4,000 மாணவ - மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சால்வை அணிவித்து, வெள்ளி விநாயகர் சிலையை, பல்கலை வேந்தர் ஏ.சி.சண்முகம் வழங்கினார்.
விழாவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் வாழ்க்கை வரலாறு தொடர்பான காணொளி திரையிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதற்கு நிர்மலா எதிர்ப்பு தெரிவித்ததால், காணொளி நிறுத்தப்பட்டது.
தயாராக இருக்கிறோம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
பட்டம் கிடைத்தது என்று, ஆணவம், அகந்தை வராமல் இருப்பது மிகவும் முக்கியம். நியூட்டனின் புவியீர்ப்பு விசை கண்டுபிடிப்பு பற்றி, இப்போதும் நாம் பேசுகிறோம். 'பல விஞ்ஞானிகள் தோள் மீது நின்று கொண்டு தான், என்னால் இதை கண்டுபிடிக்க முடிந்தது' என , நியூட்டன் பணிவுடன் சொன்னார்.
எனவே, பட்டம் பெற்ற பின் பணிவு, பொறுப்பு, அகந்தை இல்லாமல் இருக்க வேண்டும்.
இப்போது, மூன்று பெரிய போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன. உக்ரைன் - ரஷ்யா; இஸ்ரேல் -- ஈரான்; ஈரான் - அமெரிக்கா என நடக்கும் போருக்கு மத்தியில், நாட்டுக்கு தேவையான இறக்குமதிகளை செய்து கொண்டிருக்கிறோம்.
தலைமைத்துவம் இருப்பதால், நம் நாட்டின் பிரதமர் மோடி, மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ளார். அதனால் தான் நம் நாட்டில், அந்த நிலைத்தன்மை உள்ளது.
மற்ற நாடுகளில், போர் தாக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் மட்டும் தான், போர் தாக்கத்தை மக்கள் மீது சுமத்தாமல், வளர்ச்சிக்கு தேவையான முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அதன் பலன் தான் இன்று, 7.8 சதவீத பொருளாதார வளர்ச்சி.
இளம் தலைமுறை யினர், என்ன வேண்டும் என்றாலும் சொல்லுங்கள்; நீங்கள் சொல்வதை கேட்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஆனால், உங்களிடம் ஒரு சிந்தனையை விட்டு செல்ல விரும்புகிறேன். இந்த நாட்டிற்கு உங்கள் வாயிலாக என்ன செய்ய முடியும் என, நீங்கள் அனைவரும் பொறுப்புடன் அறிந்து, உங்களுடன் இருக்கும் அனைவரையும் கட்டுக்கோப்புடன் அழைத்து செல்ல வேண்டும்.
தலைமை பொறுப்பு பொறுமையாக இருக்க வேண்டும்; நல்லபடியாக நடக்க வேண்டும். நாட்டை காப்பாற்றக் கூடிய பொறுப்பை ஏற்கக்கூடிய இளம் தலைமுறைக்கு நான் சொல்வது, நமக்கு என்ன நடந்தாலும், நம் நாட்டை விட்டுக் கொடுத்து விடக்கூடாது.
இந்த கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்று வெளியே செல்லும் இளைஞர்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்.
நாட்டின் தலைமை பொறுப்பு, உங்கள் கையில் இருக்க வேண்டும். இந்த நாடு முதன்மையாக இருக்க வேண்டும்.
இந்த நாடு இருந்தால் தான், நாம் இருப்பதற்கு வீடு இருக்கும். நாடு நல்லபடியாக இருக்க வேண்டும். அப்போது தான் நாம் எல்லாரும் நல்லபடியாக வாழ முடியும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
விழாவில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், பல்கலை வேந்தர் டாக்டர் ஏ.சி.சண்முகம், பல்கலை தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார், ஏ.சி.எஸ். மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயலர் ஏ.ரவிகுமார், துணை வேந்தர் டாக்டர் எஸ். கீதாலட்சுமி பங்கேற்றனர்.

