Politics
10 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த தையூர் பணிமனை திட்டம் தொடக்கம்

திருப்போரூர்:தையூர் ஊராட்சியில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் இருந்த பணிமைன திட்டம், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
திருப்போரூர் வட்டம் கேளம்பாக்கம் அடுத்த தையூர் ஊராட்சியில் மாநகர போக்குவரத்து பணிமனை ஏற்படுத்தப்படும் என, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 2014ம் ஆண்டு, சட்டசபை கூட்டத் தொடரில், 110 விதியின் கீழ் அறிவித்தார்.
இதை கேளம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் பகுதி போக்குவரத்து தொழிலாளர்கள், வியாபாரிகள் சங்கத்தினர் வரவேற்றனர்.
ஆனால், அந்த திட்டம், பழைய மாமல்லபுரம் சாலையில், 10 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியதுடன் பணிகள் தொடங்கப்படவில்லை.
கோவளம், சிறுசேரி, கேளம்பாக்கம், திருப்போரூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களுக்கு, 400க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பணிமனைக்கான இடம் கிடைத்தும் அவற்றை செயல்படுத்தாமல் அதிகாரிகள் தயக்கம் காட்டி திட்டத்தை கிடப்பில் போட்டனர்.
அவ்வாறு கிடப்பில் போடப்பட்ட பல பணிகளை கடந்த தி.மு.க., ஆட்சியில் முடிந்தவரை செயல்படுத்தியது.
அந்த வகையில், கிடப்பில் இருந்த தையூர் பணிமனை திட்டத்தையும் தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், தி.மு.க., ஆட்சியில் இந்த திட்டத்தை மட்டும் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை.
புதிதாக பொறுப்பே ற்றுள்ள த.வெ.க., அரசு, மேற்கண்ட தையூரில் கிடப்பில் இருந்த பணிமனை திட்டம் 15 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
பத்து ஆண்டுகளாக கிடப்பில் இருந்த பணிமனை திட்ட பணிகள் 10 ஏக்கரில் தொடங்கப்பட்டுள்ளன. இதில், அலுவலகம், பழுதுபார்க்கும் பகுதி, எரிபொருள் நிரப்பும் பகுதி, வாகன நிறுத்தம் ஏற்படுத்தப்பட உள்ளது. முதற்கட்ட பணியாக மண் பரிசோதனை நடந்து வருகிறது.
இதுகுறித்து மாநகர போக்குவரத்து பணியாளர்கள் கூறியதாவது:
புதிய பணிமனை வருவதன் மூலம் அரசுக்கு எரிபொருள் மிச்சமாகும். இரவு பணி முடியும் நேரத்தில் திருப்போரூர், கேளம்பாக்கம், சிறுசேரி உள்ளிட்ட தட பேருந்துகள் தாம்பரம், அடையாறு உள்ளிட்ட அந்தந்த பணிமனைக்கு எடுத்து சென்று நிறுத்தப்படுகிறது. தற்போது தையூரில் பணிமனை அமைந்தால் மேற்கண்ட தட பேருந்துகள் தையூரில் நிறுத்தப்படும்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் உதவும். மேலும், சாலையில் பழுதாகும் பேருந்துகளை காலவிரயம் தவிர்த்து பழுது நீக்கம் செய்ய வாய்ப்பு ஏற்படும். பணியாளர்களும் பணிமனை வளாகத்தில் தங்காமல் இரவு வீடு செல்ல வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.