Politics
பவன் கல்யாண் Vs சந்திரபாபு போட்டி - காரமாக தகிக்கும் ஆந்திர அரசியல்

என்.டி.ஆர் மறைவுக்குப் பிறகு தெலுங்கு தேசம் கட்சியின் கட்டுப்பாட்டைத் தன் கையில் கொண்டுவந்த சந்திரபாபுவை, பவன் ஓவர்டேக் செய்வது அவ்வளவு எளிதல்ல.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கும், அவரது கூட்டணிக் கட்சியான ஜனசேனா தலைவரும், துணை முதல்வருமான பவன் கல்யாணுக்கும் இடையே உள்ளுக்குள் புகைந்துகொண்டிருந்தது மோதல். அது இப்போது வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியிருப்பதாக ஆந்திர அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
2024 சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் தலைமையில், பவன் கல்யாணின் ஜனசேனாவும் பா.ஜ.க-வும் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது. ஆரம்பத்தில் சந்திரபாபுவும் பவனும் இணக்கமாகச் செயல்பட்டனர். ஆனால், சமீபத்திய சில நிகழ்வுகள் இருவருக்குமிடையே உரசல் ஏற்பட்டிருக்கிறதோ என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றன.
அமைச்சரவைக் கூட்டங்கள், சட்டமன்ற நிகழ்வுகள், முதல்வர் பங்கேற்கும் சில அரசு விழாக்களில் பவன் கல்யாண் பங்கேற்காதது விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. தோள்பட்டை அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் ஓய்வில் இருப்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் அரசியல் அதிருப்தியும் இருக்கிறது என ஆந்திர ஊடகங்கள் பரபரப்பாக விவாதிக்கின்றன.
“இந்த உரசலுக்குப் பின்னால் ஜனசேனா நிர்வாகியான பவன் கல்யாணின் சகோதரர் நாகபாபுவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காத விவகாரம், சந்திரபாபுவின் மகனும் தெலுங்கு தேசத்தின் முக்கியத் தலைவருமான அமைச்சர் நாரா லோகேஷுக்கு அரசில் அளிக்கப்படும் முக்கியத்துவம், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஜனசேனாவுக்கான இடப்பங்கீடு போன்ற காரணங்கள் இருக்கின்றன. தமிழக அரசியலில் நடிகர் விஜய் குறுகியகாலத்தில் முதல்வராக உயர்ந்ததும் பவனின் அரசியல் கணக்கில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்கிறார்கள் ஆந்திர அரசியல் நோக்கர்கள்.
அவர்களிடம் பேசினோம். “என்.டி.ஆர் மறைவுக்குப் பிறகு தெலுங்கு தேசம் கட்சியின் கட்டுப்பாட்டைத் தன் கையில் கொண்டுவந்த சந்திரபாபுவை, பவன் ஓவர்டேக் செய்வது அவ்வளவு எளிதல்ல. பவனின் அரசியல் பயணமும் பல திருப்பங்களைக் கண்டது. சிரஞ்சீவி தொடங்கிய பிரஜா ராஜ்யம் கட்சி காங்கிரஸில் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் சகோதரர் பவன் கல்யாண் 2014-ல் ஜனசேனாவைத் தொடங்கினார். அதே தேர்தலில் தெலுங்கு தேசம்–பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். 2019-ல் பகுஜன் சமாஜ் கட்சி, இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட ஜனசேனாவுக்கு ஒரே ஓரிடத்தில் மட்டுமே வெற்றி கிடைத்தது. 2024-ல் தெலுங்கு தேசம் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இணைந்த ஜனசேனா, போட்டியிட்ட 21 தொகுதிகளிலும் வென்றது. பவனுக்குத் துணை முதல்வர் பதவியும் முக்கியத் துறைகளும் வழங்கப்பட்டன.
ஆனால் இப்போது, கிடைத்த அரசியல் பலத்தை வைத்து முதல்வர் பதவியை நோக்கி பவன் நகர நினைக்கிறார். தமிழகத்தில் விஜய் குறுகியகாலத்தில் முதல்வராகியிருப்பதும் அவரது கணக்கில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், தெலுங்கு தேசத்தின் ஆதரவின்றி பவன் தனித்துப் போட்டியிட்டால், மீண்டும் 2019 நிலை ஏற்படக்கூடும்்” என்கிறார்கள்.
சந்திரபாபுவின் சொந்தத் தொகுதியான குப்பத்திலுள்ள தெலுங்கு தேச நிர்வாகிகளிடம் பேசினோம். “பவன் சில நிகழ்ச்சிகளைப் புறக்கணித் தாலும், சந்திரபாபு அதைப் பெரிது படுத்தவில்லை. கூட்டணியின் பலத்தால்தான் 2024-ல் ஜனசேனா 21 இடங்களிலும் வென்றது. தனித்து நின்றால் அதே பலம் கிடைக்குமா... கேபினட் அந்தஸ்துள்ள ஆந்திரா பசுமைத் திட்ட தலைவர் பதவியில் தன் சகோதரர் நாகபாபுவை நியமித்ததற்கு முதல்வரிடம் ஆலோசிக்கவில்லை. அது மட்டுமின்றி, காபு சமூகத்தைச் சேர்ந்தவர் ஆந்திர முதல்வராக வர வேண்டும் என்று அந்தச் சமூகத்தினரைக் கூட்டம்போடவைத்து சந்திரபாபுவுக்கு எதிராகத் திருப்பிவிடுகிறார். பவனுக்கு முதல்வராகும் ஆசை வந்துவிட்டால், கூட்டணியைவிட்டு வெளியேறலாம்” என்று கொந்தளிக்கிறார்கள்.
ஜனசேனா நிர்வாகிகளோ, “ஆந்திராவில் தனக்குப் போட்டியாக புதிய அதிகார மையம் உருவாகிவிடக் கூடாது என்பதில் சந்திரபாபு தீவிரமாக இருக்கிறார். மாமனார் என்.டி.ஆரின் தெலுங்கு தேசம் கட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவர், தனக்குப் பிறகு மகன் நாரா லோகேஷை முதல்வராக்கும் வகையில் அவருக்கு அரசில் அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறார். இதை எங்கள் தலைவர் பவனால் ஏற்க முடியவில்லை. பஞ்சாயத்து ராஜ்துறை மூலம் பவன் கொண்டுவரும் திட்டங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பும் சந்திரபாபுவுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. நாகபாபுவுக்கு அமைச்சர் பதவி தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதைத்தான் பவன் வலியுறுத்தினார்.
பவனின் செல்வாக்கை அறிந்துதான் மோடியும் அமித் ஷாவும் அவரை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவந்தனர். 2024 தேர்தலில் கூட்டணியின் வெற்றிக்கும் பவனின் பிரசாரம் முக்கியக் காரணம். ஆனால், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் ஜனசேனாவுக்குக் குறைவான இடங்களையே ஒதுக்க சந்திரபாபு நினைக்கிறார். இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் பவன்தான் ‘பவர் ஸ்டார்’ என்பதை விரைவில் நிரூபிப்போம்” என்றனர்.
செப்டம்பர் 2-ம் தேதி பவனின் பிறந்தநாளுக்கு சந்திரபாபுவும், அவரின் மகன் நாரா லோகேஷும் வாழ்த்து சொன்னாலும், ஆந்திர அரசியல் குண்டூர் காரம்போல தகிக்கிறது!
