Politics
பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறையிலிருக்கும் தேவகவுடா பேரனின் மொபைலில் ஆபாச வீடியோ; சிக்கியது எப்படி?
It was discovered that the grandson of former Prime Minister Deve Gowda—who is serving a life sentence in prison for a sexual assault case—was using a mobile phone while incarcerated. A large number of obscene videos were found on the device.

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் சிறையில் மொபைல் போன் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் போனில் ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரம் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
குற்றப்பிரிவு அதிகாரிகள் சிறையில் திடீரென ரெய்டு நடத்தினர். இதில் பிரஜ்வல் ரேவண்ணா மொபைல் போன் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பிரஜ்வல் அடைக்கப்பட்டு இருந்த உயர் பாதுகாப்பு அறையில் இருந்து சார்ஜர், பென் டிரைவ் மற்றும் நோட்புக் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். போன் மற்றும் பென் டிரைவ் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் மொபைல் போனில் 10க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. பென் டிரைவில் வெப் சீரியஸ் இருந்தது. சிறையில் ரேவண்ணாவிற்கு வி.ஐ.பி சலுகை கொடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு ரேவண்ணா அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதால் ஒரு சிறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் ரேவண்ணா ரூ.70 ஆயிரம் செலவு செய்து மொபைல் போனை சிறைக்குள் கடத்தி வந்துள்ளார். இது தவிர ரூ.30 ஆயிரம் கொடுத்து சிம்கார்டு வாங்கி இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.
சிறைச்சாலைகளுக்குள் தனிப்பட்ட மொபைல் போன்கள், சிம் கார்டுகள் மற்றும் மின்னணு தகவல் தொடர்பு சாதனங்கள் உலகளவில் தடை செய்யப்பட்டுள்ளன. லேண்ட்லைன்கள், பொது அழைப்பு அலுவலகங்கள் (பிசிஓக்கள்) அல்லது நியமிக்கப்பட்ட வீடியோ அழைப்பு மூலமாக மட்டுமே குடும்பத்தினருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள கைதிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 48 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் வன்கொடுமை வீடியோக்களைப் பரப்பிய குற்றச்சாட்டில் ரேவண்ணா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
ஹசன் மாவட்டம் ஹோலேநரசிபுராவில் உள்ள ரேவண்ணா குடும்பத்திற்குச் சொந்தமான பண்ணை வீட்டில் வீட்டுப் பணியாளராகப் பணிபுரிந்த பெண், 2021 ஆம் ஆண்டு முதல் பிரஜ்வல் ரேவண்ணாவால் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.
