Religion
கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜை
கடலுார்: கடலுார் பகுதி கிருஷ்ணர் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜை நடந்தது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் திருவரசம் பிள்ளை தெரு ருக்மிணி சத்யபாமா சமேத கண்ணபிரான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கடந்த 3ம் தேதி திருமஞ்சனம், மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை சிறப்பு யாக வேள்வி, திருமஞ்சனம் நடந்தது. ருக்மிணி சத்யபாமா சமேத கண்ணபிரான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (5ம் தேதி) காலை 10:30 மணிக்கு திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு கருட சேவையில் வீதியுலா நடக்கிறது. நாளை 6ம் தேதி காலை 7:30 மணிக்கு திருமஞ்சனம், இரவு 7:00 திருக்கல்யாணம், 7ம் தேதி காலை 9:00 மணிக்கு திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. இதே போன்று, கடலுார் துறைமுகம் காமாட்சி அம்மன் கோவில் தெரு கோபால கிருஷ்ண சுவாமி கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.
கீரப்பாளையம் நவநீத கிருஷ்ணன் கோவிலில் நேற்று காலை மூலவர் மற்றும் உற்சவர்களான கண்ணன், ராதை, ருக்மணி மற்றும் ஆஞ்சநேயர், கருடாழ்வார், வினாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மாலை சுவாமி வீதியுலா மற்றும் உறியடி நிகழ்ச்சி நடந்தது.
சிறுபாக்கம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து வரதராஜப் பெருமாள் கிருஷ்ணர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து உறியடி மற்றும் வழக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.