Politics
`ஆசிரியர்களின் அலட்சியத்தால் விபத்து’ - வேலூர் கலெக்டரைச் சந்திக்க ஆம்புலன்ஸில் வந்த பள்ளி மாணவி
விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அரசுப்பள்ளி மாணவி ஒருவர், கலெக்டரைச் சந்திக்க ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஸ்ட்ரெச்சரில் படுத்தவாறு வந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது. | accident caused by teachers' negligence - government school girl student arrives in an ambulance to meet the vellore collector

வேலூர் அருகே ஆசிரியர்களின் அலட்சியத்தால் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அரசுப்பள்ளி மாணவி ஒருவர், கலெக்டரைச் சந்திக்க ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஸ்ட்ரெச்சரில் படுத்தவாறு வந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
வேலூர் அருகேயுள்ள அரியூர் காந்தி நகரைச் சேர்ந்த தம்பதி ரூபன்குமார் - தீபிகா. இவர்களின் மகள் ரூபிகா தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்புப் பயின்று வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி காலையில் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றார் ரூபிகா.
அன்றைய தினம், ஊசூர் தெள்ளூர் சாலை அருகிலுள்ள அரசுப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றதால் அதில் கலந்துகொள்வதற்காக சக மாணவிகள் சிலருடன் ரூபிகாவையும் ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்திருக்கிறார் உடற்கல்வி ஆசிரியர். மாணவிகளும் அந்தப் பள்ளிக்குச் சென்று விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட பிறகு மதிய வேளையில் தங்களின் பள்ளிக்குத் திரும்புவதற்காக ஊசூர் பேருந்து நிறுத்தப் பகுதிக்குச் சாலையோரமாக நடந்து வந்தனர்.
அப்போது, வேகமாக வந்த கார் சாலையோரமாகச் சென்ற மாணவிகள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ரூபிகா உட்பட 7 மாணவிகள் காயமடைந்ததால், விரைவாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரூபிகாவுக்கு மட்டும் இடுப்பு எலும்பு மற்றும் கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனால், அவரால் எழுந்து நடக்க முடியாமல் போனது. மருத்துவர்கள் ஆபரேஷன் செய்து 5 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு மாணவி ரூபிகாவை டிஸ்சார்ஜ் செய்திருக்கின்றனர். இதனால், மேல்சிகிச்சைக்குச் செல்ல வழித்தெரியாமல் மாணவி ரூபிகாவின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மகளின் எதிர்காலத்தை நினைத்து பெற்றோரும் திக்குதிசைத் தெரியாமல் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஸ்ட்ரெச்சரில் படுத்தவாறு பெற்றோரால் அழைத்துவரப்பட்டிருந்தார் மாணவி ரூபிகா. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸிடம் புகாரளித்தார் தாய் தீபிகா.
இதுபற்றி, செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் தாய் தீபிகா, ``என் மகள் உட்பட மாணவிகளை தனியாக அனுப்பி வைத்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் உடன் செல்லாத உடற்கல்வி ஆசிரியர், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரியூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றால் அங்கிருக்கும் எஸ்.ஐ என் மனுவை வாங்க மறுத்துவிட்டார். பாதிக்கப்பட்டது என்னுடைய மகள். 5 நாள்களாக என் மகளை அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையத்துக்கும் வீட்டுக்குமாக திரிந்துக்கொண்டிருந்தேன். கடைசிவரை என்னுடைய மனுவைப் போலீஸார் ஏற்றுக்கொள்ளவில்லை.
விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் பற்றியும் எந்தவொரு தகவலையும் போலீஸார் தரவில்லை. இதனால், கலெக்டரிடம் மனு அளிக்க வந்தேன். `சி.எம்.சி மருத்துவமனையில் சேர்த்து உயர் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுப்பதாக’ கலெக்டர் கூறியிருக்கிறார். அலட்சியமாக செயல்பட்ட சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர்கள் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார் ஆதங்கமாக.
