மேலுார் =- காரைக்குடி நான்கு வழிச்சாலை செப்., 15ல் போக்குவரத்து அனுமதி
*6 ஆண்டுக்கு பின் திட்டம் நிறைவுதிருப்புத்துார், செப்.12- சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் வழியாக
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் வழியாக செல்லும் மேலுார் =-காரைக்குடி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை 338 செப்.15ல் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது. ரோட்டிற்கான பணிகள் நிறைவேற ஆறு ஆண்டுகளாகியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை எண் :338, நான்கு வழிச்சாலையாக மேலுார் புறவழிச்சாலையில் துவங்கி கீழவளவு,குண்டேந்தல்பட்டி,திருப்புத்துார்,பிள்ளையார்பட்டி,குன்றக்குடி,கரரைக்குடி புறவழிச்சாலை சந்திப்பு வரை செல்கிறது. இந்த ரோட்டில் மேலுார் -திருப்புத்துார் துாரம் 27 கி.மீ.,ஆகவும் திருப்புத்துார்-= காரைக்குடி துாரம் 19 கி.மீ., என மொத்தத்தில் 45.8 கி.மீ.,நீளமுள்ளது. 2020 மார்ச் ல் ரூ.756 கோடி மதிப்பில் இந்த நான்கு வழிச்சாலை திட்டப்பணி துவங்கியது. பின்னர் பல மாற்றங்கள் செய்யப்பட்டு ரூ. 1070 கோடிக்கு திட்டமதிப்பு அதிகரித்தது.
கொரோனா தாக்கம், கோர்ட் நடைமுறைகளால் பணிகள் பாதிக்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது திட்டம் நிறைவடைந்துள்ளது.
இந்த ரோட்டில் திருக்கோஷ்டியூர் அருகே பிராமணம்பட்டியில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. ஆக.,1 முதல் இங்கு சோதனை முறையில் வாகனம் அனுமதிக்கவும், ஆக.,15 ல் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது. ஆனால் ரோட்டில் உயர்மட்ட பாலங்கள் உள்ள பகுதியில் ரோடுகளில் சில மேடு, பள்ளங்களை மேம்படுத்த வேண்டியிருந்ததால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் , நேற்று முன்தினம் இரவு முதல் பிராமணம்பட்டி டோல்கேட்டில் சோதனை முறையில் அனுமதிக்கப்பட்டது. கட்டணம் வசூலிக்காமல் டோல்கேட் இயங்குவது சோதிக்கப்படுகிறது.
செப்., 15ல் இந்த ரோடு முழுமையாக மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது.இந்த ரோடு வழக்கமான மேலுார் -காரைக்குடி துாரத்தை விட 4 கி.மீ. குறைவாகும்.இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக பிள்ளையார்பட்டியிலிருந்து தஞ்சாவூர் செல்ல கைக்குரிச்சி வரை நான்குவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான ஆய்வுப்பணி நடந்து வருகிறது.