22 ஆண்டுகளுக்கு பின் 10-ம் வகுப்பு தேர்வில் சாதித்த வாய் பேசாத, காது கேளாத தாய்
ஸ்ரீநகர், விடாமுயற்சி இருந்தால் வயதும் உடல் குறைபாடும் ஒரு தடையல்ல என்பதை ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த மாற்றுத்திறனாளி தாய் ஒருவர் நிரூபித்துக் காட்டியுள்ளார். வாய் ப

விடாமுயற்சி இருந்தால் வயதும் உடல் குறைபாடும் ஒரு தடையல்ல என்பதை ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த மாற்றுத்திறனாளி தாய் ஒருவர் நிரூபித்துக் காட்டியுள்ளார். வாய் பேச முடியாத, காது கேளாத 45 வயது பெண்மணி ஒருவர், தன் மகனின் உதவியுடன் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 82 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் ரேணு ஹன்ஸ் (வயது 45). காஷ்மீர் பகுதியை சேர்ந்த இவர், வாய் பேசும் திறனும் காது கேட்கும் திறனும் இல்லாத மாற்றுத்திறனாளி ஆவார். ரேணு ஹன்ஸ் திருமணத்திற்கு முன்பே 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை.
அதன் பிறகு திருமணம், குடும்பம் எனச் சூழ்ந்து கொண்டதால், கடந்த 22 ஆண்டுகளாக அவரது கல்வி பாதியிலேயே நின்றது. இருப்பினும், எப்படியாவது பள்ளி படிப்பை முடிக்க வேண்டும் என்ற லட்சியம் அவரது மனதில் உறுதியாக இருந்தது.
தாயின் நீண்ட நாள் கனவை நனவாக்க அவரது ஒரே மகன் நமன் கவுல் களம் இறங்கினார். பிளஸ்-2 படித்து வரும் நமன், சைகை மொழியிலேயே தனது தாயுடன் பேசி பழகியவர். தன்னுடைய சொந்த படிப்பிற்கு நடுவிலும், தினமும் மாலை மற்றும் இரவு நேரங்களில் தனது தாய்க்கு சிறப்பு வகுப்புகள் எடுத்து பாடம் சொல்லி கொடுத்தார் நமன். தாயின் சந்தேகங்களை சைகை மூலம் பொறுமையாக விளக்கி, அவரை தேர்வுக்கு முழுமையாக தயார்படுத்தினார்.
மகனின் தீவிர பயிற்சியை தொடர்ந்து, நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் மாநில வாரிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவில், ரேணு ஹன்ஸ் 500-க்கு 406 மதிப்பெண்கள் (86 சதவீதம்) பெற்று தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.
தேர்வு மையத்திற்கு சென்றபோது தன்னைவிட மிக குறைந்த வயதுடைய மாணவ-மாணவிகளை பார்த்து முதலில் பயந்ததாகவும், பின்னர் மகனின் உத்வேகத்தால் எழுதி சாதித்ததாகவும் ரேணு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
22 ஆண்டுகளுக்கு பிறகு மகனையே குருவாக ஏற்று, மாற்றுத்திறனாளி தாய் படைத்துள்ள இந்த இமய சாதனைக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.