கோத்தகிரி ஈளாடா தடுப்பணையில் வரத்து குறைவு நகர பகுதிக்கு தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்

கோத்தகிரி: கோத்தகிரி ஈளாடா தடுப்பணையில், தண்ணீர் வரத்து குறைந்து வருவதால், நகர பகுதிக்கு தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி நகர பகுதிக்கு, ஈளாடா தடுப்பணியில் இருந்து, தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த அணை, 90 மீ., நீளம், 60 மீ., அகலம், 12 அடி ஆழம் கொள்ளளவு கொண்டது.
இங்கிருந்து, கொண்டுவரப்படும் தண்ணீர், புதுார் பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில், சுத்திகரிக்கப்பட்டு, அங்கிருந்து 'பம்ப்' செய்யப்பட்டு, சக்தி நிலை மெகா தொட்டியில் சேகரித்து நகரின் தாழ்வான பிற பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில், குடியிருப்புகள் குறைவாக இருந்த நிலையில், இந்த தண்ணீர் போதுமானதாக இருந்தது. தற்போது, குடியிருப்புகளுடன் காட்டேஜ்கள் அதிகரித்துள்ளதால், இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை.
நிறைவான தண்ணீர் பிடிக்க ஏதுவாக, 'அளக்கரை கூட்டு குடிநீர் திட்டம் அம்ருத் 2.0' பணிகள் வாயிலாக நகர குடியிருப்புகளுக்கு சீரான தண்ணீர் வினியோகிப்பதற்கான பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக, மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவுவதால், ஈளாடா மற்றும் அளக்கரை நீர் ஆதாரங்களில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
இதனால், நகர பகுதிக்கு தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், ஈளாடா தடுப்பணையை நம்பி, பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், தண்ணீர் பாய்ச்ச முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எதிர்வரும் நாட்களில், வறட்சி நீடிக்கும் பட்சத்தில், தண்ணீர் தட்டுபாடு மேலும், அதிகரித்து, தனியாரிடம் பணம் கொடுத்து தண்ணீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.
மக்கள் கூறுகையில், 'கோத்தகிரி நகராட்சி நிர்வாகம், நகர மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய ஏதுவாக, ஈளாடா நீர் ஆதாரத்தை மட்டும் நம்பி இருக்காமல், அளக்கரை திட்ட பணியை விரைந்து முடித்து, மக்களுக்கு தடையில்லாமல் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.