தெப்பக்காடு சாலையில் வாகனங்கள் நெரிசல் சுற்றுலா பயணியர் அதிருப்தி

கூடலூர்: முதுமலை -- தெப்பக்காடு சாலையில், வார விடுமுறை நாட்களில் வாகன நெரிசலால் சுற்றுலா பயணியர் அதிருப்தி அடைந்தனர்.
முதுமலை, மசினகுடி - கல்லட்டி சாலையில் வாகன விபத்துகளை தடுக்கவும், வனவிலங்குகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உள்ளூர் வாகனங்களை தவிர்த்து, ஊட்டியில் இருந்து முதுமலைக்கு சுற்றுலா வாகனங்கள் இயக்க ஏற்கனவே தடை உள்ளது.
தொடர்ந்து, ஐகோர்ட் உத்தரவுபடி, வனத்துறையினர் மாவனல்லா பகுதியில், கடந்த வாரம் முதல் சோதனை சாவடி அமைத்து, தினமும் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை, 200 சுற்றுலா வாகனங்களை மட்டும் அனுமதித்தனர். வார விடுமுறையை ஒட்டி, சுற்றுலா வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், கல்லட்டி சாலையில் இரண்டு மணி நேரத்தில், 200 வாகனங்கள், சோதனை சாவடியை கடந்து சென்று விடுகிறது.
அதன்பின் வரும் சுற்றுலா வாகனங்கள், அவ்வழியாக செல்ல முடியாமல் திரும்பி தெப்பக்காடு வந்து ஊட்டி செல்கின்றனர். இதன் காரணமாக கக்கநல்லா - தெப்பக்காடு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையால் சுற்றுலா பயணியர் சிரமத்திற்கு ஆளாகினர்.
சுற்றுலா பயணியர் கூறுகையில், 'தெப்பக்காட்டில் இருந்து மாவனல்லா வரை சென்று, கல்லட்டி வழியாக செல்ல முடியாமல் திருப்பி அனுப்பப்படுவதால், மீண்டும் தெப்பக்காடு வந்து கூடலூர் வழியாக ஊட்டி செல்ல வேண்டி உள்ளது. சிரமங்களை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்றனர்.