சட்டவிரோத டூவீலர் ஸ்டாண்ட்: அலுவலர்களின் மெத்தனம்- நடவடிக்கை கோரும் பொதுமக்கள்

வடலூர் நகராட்சிப் பகுதியில் எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக டூவீலர் ஸ்டாண்ட் நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் நகராட்சிக்குச் சேர வேண்டிய பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இச்சட்டவிரோதச் செயலைக் கட்டுப்படுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடலூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தின் முக்கிய மையப் பகுதியாக வடலூர் விளங்குகிறது. இங்கு உலகப் புகழ்பெற்ற வள்ளலார் தெய்வ நிலையம், அரசு தொழிற்பயிற்சி நிலையம், மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை, அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் வங்கிகள் அமைந்துள்ளன. இதன் காரணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், ஏராளமான வாகனங்களும் வடலூரை கடந்து செல்கின்றன.
மேலும், வடலூர் பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகப் பகுதிகள் சென்னை, கும்பகோணம், புதுச்சேரி, திருச்சி ஆகிய நான்கு முக்கியச் சாலைகளை இணைக்கும் நான்கு முனைச் சந்திப்பாக விளங்குவதால், நாள்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்லும் மையப் பகுதியாக உள்ளது. இத்தகைய சூழலைப் பயன்படுத்தி, வடலூர் - கடலூர் செல்லும் சாலையில் பழைய பூங்கா அமைந்திருந்த தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தையும், பொதுப் போக்குவரத்துப் பாதைகளையும் ஆக்கிரமித்து சிலர் சட்ட விரோதமாக டூவீலர் ஸ்டாண்ட் நடத்தி வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகத்திடம் இருந்து முறையான உரிமம் பெறாமலும், எந்தவித ஏல விதிகளையும் பின்பற்றாமலும் இந்த ஸ்டாண்ட் பல ஆண்டுகளாகத் தங்கு தடையின்றி செயல்பட்டு வருகிறது. பொதுவாக நகராட்சி எல்லைக்குள் உள்ள பொது இடங்களில் டூவீலர் ஸ்டாண்ட் அமைப்பதற்கு, முறைப்படி இ-டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு ஏலம் விடப்பட வேண்டும். இதன் மூலம் நகராட்சிக்கு ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் கட்டண வருவாயாகக் கிடைக்கும்.
இந்நிதி நகரின் குடிநீர், சாலை, மின்விளக்கு போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும். ஆனால், வடலூரில் பல ஆண்டுகளாக இந்தச் சட்டவிரோத ஸ்டாண்ட் இயங்கி வருவதால், நகராட்சி கருவூலத்திற்கு வர வேண்டிய பெரும் தொகை தனிநபர்களின் கைக்குச் செல்கிறது. இதனால் நகராட்சிக்கு நேரடி நிதியிழப்பு ஏற்படுவதோடு, நகர்ப்புற வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.
சட்டவிரோதமாகச் செயல்படும் நபர்கள், வாகன உரிமையாளர்களிடம் நகராட்சி நிர்ணயித்த தொகையை விடப் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், நிழற்கூரை இன்றி மழை மற்றும் வெயிலில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சேதமடைகின்றன.
அதுமட்டுமின்றி, கட்டணம் வசூலிப்பதற்கு நகராட்சி முத்திரை அல்லது ஜி.எஸ்.டி எண் இல்லாத சாதாரணத் துண்டுச் சீட்டுகளே வழங்கப்படுகின்றன. முறையான உரிமம் இல்லாததால், நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ அவர்கள் எந்தப் பொறுப்பும் ஏற்பதில்லை. மேலும், சாலையோரங்களை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதால் பேருந்துகள் வந்து செல்வதிலும், பாதசாரிகள் நடந்து செல்வதிலும் கடும் சிரமம் ஏற்படுகிறது.
நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே இத்தகைய சட்டவிரோதச் செயல்களுக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டும் பொதுமக்கள், கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டுச் சட்டவிரோதமாகச் செயல்படும் டூவீலர் ஸ்டாண்டை அகற்றிச் சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
மேலும், இதுவரை சட்டவிரோதமாக பணம் வசூலித்த தனிநபர்கள் மீது காவல்துறையின் மூலம் வழக்குப்பதிவு செய்து, முறைகேடாகச் சேர்த்த நிதியைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும்; நகராட்சிக்கு உரிய இடங்களை அடையாளம் கண்டு, முறைப்படி இ-டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுப் புதிய டூவீலர் ஸ்டாண்டிற்கு ஏலம் விட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் இது குறித்து பல்வேறு புகார்கள் அளித்தும் நகராட்சி நெடுஞ்சாலைத்துறை காவல்துறை அலுவலர்கள் மெத்தன போக்காக செயல்படுவதாகவும் சரியான முறையில் நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)