“கணவரைத் தனிக் குடித்தனம் வருமாறு வற்புறுத்துவது துன்புறுத்தல் ஆகும்” - உயர் நீதிமன்றம் கருத்து!

மனைவி அடிக்கடி காரணமின்றித் கணவன் வீட்டை விட்டு வெளியேறுவதும், கணவரைத் தனித் குடித்தனம் செல்லுமாறு வற்புறுத்துவதும் துன்புறுத்துவதற்கு சமமானது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்த் தெரிவித்துள்ளனர்.
பெற்றோரின் ஒரே மகனாக இருக்கும் கணவர் ஒருவருக்கு சொந்தமாக வீடு இருந்தபோதிலும் தனிக்குடித்தனம் செல்லுமாறு மனைவி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதனை ஏற்று அந்த நபரும் பெற்றோரை விட்டு, மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்திற்கு மனைவியுடன் குடியேறியுள்ளார். இருப்பினும் மனைவி அவரை விட்டுவிட்டு மாதக்கணக்கில் பெற்றோர் வீட்டில் தங்குவதை ழக்கமாக கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் மன உளைச்சல் அடைந்த அந்த நபர், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை எதிர்த்து மனைவி, கணவர் வரதட்சணை கோரியதாகவும், அவருக்கு வேறொரு பெண்ணுடன் முறையற்ற தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட குடும்ப நல நீதிமன்றம், வாய்மொழி மற்றும் ஆவணச் சான்றுகளின் அடிப்படையில், அவர்களுக்கு விவகாரத்து வழங்கி உத்தரவிட்டது. அந்த உத்தரவால் அதிருப்தி அடைந்த மனைவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.டி. ஆஷா மற்றும் என். மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனைவி தரப்பில், மனுதாரருக்கு கூடுதல் ஜீவனாம்சனம் வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘கணவன்-மனைவி இடையிலான உறவு என்பது பரஸ்பர புரிதலின் அடிப்படையில் அமைந்த ஒன்று. அது இருவரில் ஒருவரின் விருப்பப்படியோ அல்லது கட்டளையின்படியோ மட்டும் இயங்கக்கூடியதல்ல. இத்திருமண பந்தமானது அன்பு, கருணை மற்றும் பரஸ்பர அனுசரிப்பு ஆகியவற்றுடன் பேணிக்காக்கப்பட வேண்டும். பெற்றோரின் ஒரே மகனான கணவர், முதுமைக்காலத்தில் அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டிய கடமை கொண்டவர். இதை முழுமையாக அறிந்தே அப்பெண் அவரைத் திருமணம் செய்துகொண்டார்
அப்படி இருக்கும் போது மனைவி அவரைத் தனிக் குடித்தனம் செல்லுமாறு நியாயமற்ற முறையில் வற்புறுத்தியது கொடுமையாகக் கருதப்படுகிறது. நியாயமான காரணங்கள் ஏதுமின்றி அப்பெண் அடிக்கடி தனது தாய் வீட்டிற்குச் செல்வது என்பது துன்புறுத்தல் என்ற வகையைச் சாரும். இத்தகைய நடத்தை, மற்றுமொரு துணையின் மனதில் பாதுகாப்பற்ற உணர்வையும், பயத்தையும் ஏற்படுத்தக்கூடும். அதாவது, எப்போது வேண்டுமானாலும் சண்டையிட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிடுவார்களோ என்ற அச்சத்தை இது உருவாக்கலாம். குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது மனைவி ஒத்துழைக்கவில்லை. சாட்சியம் அளிக்கவும் கணவரின் வாதங்களை எதிர்க்கவும் அவருக்குப் பல வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும், அவர் குறுக்கு விசாரணைக்கு உட்படவோ அல்லது தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவோ இல்லை” என்று குறிப்பிட்டு மனைவியின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)