செங்கல்பட்டு சதுரங்கப்பட்டினம் கோட்டையை மீண்டும் அகழாய்வு செய்ய தொல்லியல் துறை முடிவு

சென்னை:மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் கோட்டை, மீண்டும் அகழாய்வு செய்யப்பட உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இருந்து, 22 கி.மீ., தொலைவில் உள்ளது சதுரங்கப்பட்டினம் எனும் துறைமுக நகரம். இந்த பகுதியை நெதர்லாந்து நாட்டிலிருந்து, நம் நாட்டிற்கு வணிகம் செய்ய வந்த டச்சுக்காரர்கள், 17ம் நுாற்றாண்டில், இப்பகுதியை தங்களின் வணிகத்தளமாகவும், ராணுவ நடவடிக்கைகளுக்கான தளமாகவும் மாற்றினர்.
தங்களின் வணிக பயன்பாடு மற்றும் பாதுகாப்புக்காக, ராட்சத தானியக்கிடங்கு, யானைகளின் கட்டுத்தறிக்கான தம்பம், குதிரை லாயம், பண்டகசாலை, வெடிமருந்து சேமிக்கும் ரகசிய சுரங்கப்பாதைகள், சிறைச்சாலைகள் உள்ளிட்டவற்றுடன், 10 ஏக்கர் பரப்பளவில் பாதுகாப்பான கோட்டையையும், அதைச் சுற்றி மதிலுடன் கூடிய சுற்றுச்சுவரையும் கட்டினர்.
மேலும், இப்பகுதியில், 1620 - 1760 வரையிலான டச்சுக்காரர்களின் கல்லறைகளும் இருந்தன. இப்பகுதியிலிருந்து, உயர்தர மெல்லிய பருத்தி ஆடை, நெல், செங்கல் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை நெதர்லாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
டச்சுக்காரர்களுக்கும், பிரிட்டிஷாருக்கும் ஏற்பட்ட வணிகப் போட்டியில் 1818ல், இப்பகுதியில் இருவருக்கும் இடையே போர் நடந்தது. அதில், பிரிட்டிஷார் கோட்டையைக் கைப்பற்றியனர்.
சுதந்திரத்துக்குப்பின் கைவிடப்பட்ட இந்த கோட்டை, கடற்கரை மணல் மூடி, இயற்கைச் சீற்றங்களால் சிதைந்தது. இந்நிலையில், கடந்த 2003ல், மத்திய தொல்லியல் துறை இங்கு அகழாய்வு செய்தது. அப்போது, புகைப்பிடிக்கும் குழாய்கள், மதுவுக்கான கண்ணாடி ஜாடிகள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அப்பகுதியை மீண்டும் அகழாய்வு செய்து, சுற்றுலா பயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய, மத்திய தொல்லியல் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.