Politics
ஜல்லிக்கட்டை முதல்வர் விஜய் நேசிக்கிறாரா இல்லையா கேட்கிறது அ.தி.மு.க.,

மதுரை: ''தமிழ் இனத்தின் மீதும் தமிழ் மக்கள் மீதும் முதல்வருக்கு அக்கறை இருந்தால் சட்டசபையில் ஜல்லிக்கட்டு போட்டியை கொச்சைப்படுத்தி பேசிய எம்.எல்.ஏ.,வை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும். ஜல்லிக்கட்டை முதல்வர் நேசிக்கிறாரா, இல்லையா'' என அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
சட்டசபையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் சோழவந்தான் த.வெ.க., எம்.எல்.ஏ., கருப்பையா பேசியதற்கும், த.வெ.க., அரசை கண்டித்தும் அ.தி.மு.க., சார்பில் அலங்காநல்லுார் வாடிவாசல் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் நகர் செயலாளர் செல்லுார் ராஜூ பேசுகையில், ''வரம் கொடுக்கும் சாமியின் தலையில் கையை வைத்த கதையாக காங்கிரஸ் தயவில் ஆட்சியை நடத்திக் கொண்டு அடுத்த பிரதமர் விஜய் தான் என்று கூறி வருகிறார்கள். பழனிசாமி சொல்வது போல் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி என்றுக்கூட சொல்வார்கள்'' என்றார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா பேசுகையில், ''தமிழகத்தில் இரண்டு போராட்டங்களை வீழ்த்த முடியாது. ஒன்று ஹிந்தி எதிர்ப்பு போராட்டம். மற்றொன்று மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக இளைஞர்கள் போராடியது. அதன் மூலம் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. ஜல்லிக்கட்டு உரிமையை பெற்று தந்தது அ.தி.மு.க., அரசு. இந்த ஆர்ப்பாட்டம் மூலம் ஜல்லிக்கட்டு உரிமை நிலைநாட்டப்பட்டு வருகிறது'' என்றார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் பேசியதாவது: சட்டசபையில் வனத்துறை அமைச்சர் பேசும்போது கருணாநிதி என்று பெயரைக் கூறியதற்கு முதல்வர் 'சாரி' கேட்டார்.
ஆனால் ஒரு இனத்தின் அடையாளத்தை இழிவுப் படுத்திய எம்.எல்.ஏ.,வை ராஜினாமா செய்து வைத்து கண்டனத்தை அவர் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.
ஆர்ப்பாட்டம் அறிவித்தவுடன் அவை குறிப்பிலிருந்து சர்ச்சைக்குரிய பேச்சை நீக்குகிறார்கள். முதல்வர் ஜல்லிக்கட்டை நேசிக்கிறாரா இல்லையா. விஜய் அனுமதியுடன் எம்.எல்.ஏ., பேசினாரா.
மேட்டூர் அணையை கட்டிய செலவைவிட அதனை முதல்வர் பார்க்கச் சென்ற செலவு அதிகம். ஒரு பாட்டியிடம் கண்ணாடியை கொடுத்து எம்.ஜி.ஆர்., போல விஜய் காட்டினார். அந்த பாட்டி 'தாசில்தார் முதல் நாள் வந்து என்னை பார்த்து விட்டு சென்றார்' என்று உண்மையை கூறிவிட்டார். தமிழ் இனத்தின் மீதும் தமிழ் மக்கள் மீதும் முதல்வருக்கு அக்கறை இருந்தால் சட்டசபையில் ஜல்லிக்கட்டு போட்டியை கொச்சைப்படுத்தி பேசிய எம்.எல்.ஏ.,வை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் சரியான பதிலடியை தருவார்கள்.
இவ்வாறு பேசினார்.
