Politics
தி.மு.க., – திரிணமுல் எம்.பி.,க்கள் மீதான ஊழல் புகார்கள் தள்ளுபடி
புதுடில்லி: தி.மு.க., – எம்.பி., கலாநிதி வீராசாமி, 57, திரிணமுல் காங்., – எம்.பி., அரூப் சக்ரவர்த்தி, 71, ஆகியோருக்கு எதிரான ஊழல் புகார்களை, ஊழல் தடுப்பு அமைப்பான, ‘லோக்பால்’ தள்ளுபடி செய்தது.
மேற்கு வங்கத்தின் பாங்குரா தொகுதி எம்.பி.,யான அரூப் சக்ரவர்த்தி, கடந்த மே மாதம், மாநிலத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த சில நாட்களில், முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக போர்க்கொடி துாக்கி, திரிணமுல் காங்கிரசில் இருந்து விலகி, இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்த, 20 அதிருப்தி எம்.பி.,க்களில் ஒருவர்.
அரூப் சக்ரவர்த்திக்கு எதிராக, அரசு மீன்பிடி திட்டத்தை முறைகேடாக ஒப்படைத்தது, ‘தாராபூர் ஜில்’ சுற்றுலா பகுதியில், மாதம், 50 லட்சம் ரூபாய் சட்டவிரோத வருவாய் ஈட்டியது, தன் சகோதரர் ஆஷிஷ் சக்ரவர்த்தி மூலம் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன.
இது குறித்து விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு லோக்பால் அமைப்பு உத்தரவிட்டது. பல கட்டங்களாக விசாரித்த சி.பி.ஐ., சமீபத்தில் இறுதி விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், ‘அரூப் சக்ரவர்த்தி மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர் மீதான ஊழல் வழக்கை லோக்பால் அமைப்பு தள்ளுபடி செய்தது.
இதே போல், சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், 1.70 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுக்கு பதில், புகார்தாரரை மிரட்டி, 38 லட்சம் ரூபாயை ஏற்கும்படி, தி.மு.க.,வைச் சேர்ந்த வடசென்னை லோக்சபா எம்.பி., கலாநிதி வீராசாமி வற்புறுத்தியதாக, 2025 செப்டம்பரில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கையும் லோக்பால் உத்தரவுப்படி, சி.பி.ஐ., விசாரித்தது. ஆக., 19ல், சி.பி.ஐ., தாக்கல் செய்த இறுதி அறிக்கையில், ‘கலாநிதி வீராசாமியின் தொடர்பை உறுதிப்படுத்தும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை’ என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மீதான வழக்கையும் லோக்பால் அமைப்பு தள்ளுபடி செய்தது.